காரைக்குடியில், அரசு ஐடிஐயில் மொபைல் போன் எடுத்து வந்த மாணவரைக் கண்டித்த ஆசிரியருக்கு கத்திக்குத்து✍️ முழுவிவரம்✍️✍️விண்மீன் நியூஸ்
அரசு ஐடிஐ கல்லூரியில் வகுப்புக்கு மொபைலுடன் வந்ததை கண்டித்த ஆசிரியருக்கு கத்திக்குத்து*
காரைக்குடி: காரைக்குடி அரசு ஐடிஐயில் மொபைல் போன் எடுத்து வந்த மாணவரைக் கண்டித்த ஆசிரியருக்கு கத்திக்குத்து விழுந்தது.
காரைக்குடி அமராவதிப் புதூர் அரசு ஐடிஐயில் இரு நாட்களுக்கு முன்பு மாணவர் ஒருவர் வகுப்புக்கு மொபைல் போன் கொண்டு வந்தார். இதைப் பார்த்த ஓவிய ஆசிரியர் ராஜா ஆனந்த் (48), அம்மாணவரை கண்டித்ததோடு, மொபைல் போனை பறிமுதல் செய்து முதல்வரிடம் ஒப்படைத்தார்.
ஐடிஐ முதல்வரும் மாணவரின் தாயாரை வரவழைத்து, இனிமேல் உங்கள் மகன் வகுப்புக்கு மொபைல் போன் கொண்டு வரக்கூடாது என அறிவுரை கூறி, அவரிடம் போனை கொடுத்து அனுப்பினார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த மாணவர் நேற்று காலை வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது ஆசிரியர் ராஜா ஆனந்தை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 4 இடங்களில் சரமாரியாகக் குத்தினார். இதில் நிலைகுலைந்த ஆசிரியர் கீழே விழுந்தார்.
பின்னர் தப்பியோட முயன்ற மாணவரை சக மாணவர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த ஆசிரியர் ராஜாஆனந்த் காரைக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பிறகு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோமநாதபுரம் போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அந்த மாணவரைக் கைது செய்தனர்.