தமிழகஅரசு என்னை விடுவிக்க முடியாது பொன்மானிக்கவேல் பதிலடி?
?♨தமிழக அரசு என்னை விடுவிக்க முடியாது : பொன்மாணிக்கவேல் பதிலடி
சென்னை : சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து பொன் மாணிக்கவேலை விடுவித்த தமிழக அரசு, சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு தன்னை விடுக்க முடியாது என பொன் மாணிக்கவேல் பதிலளித்துள்ளார்.
‘தினமலர்’, இதழுக்கு, தொலைபேசி வாயிலாக பொன்மாணிக்கவேல் நேற்று(நவ.,30) அளித்த சிறப்பு பேட்டி:
சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து தமிழக அரசு உங்களை விடுவித்து உத்தரவிட்டுள்ளதே?
இங்கு, முதலில் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். நான், தமிழக காவல் துறையின் கீழ் பணியாற்றும் அதிகாரி அல்ல. சிறப்பு அதிகாரியாக, அரசாங்க உத்தரவின் வாயிலாக நான் நியமிக்கப்படவில்லை. கோர்ட் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டவன். நான் பணி ஓய்வு பெற்றபின், சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக கோர்ட்டால்தான் நியமிக்கப்பட்டேன். அதற்கான நியமன உத்தரவில், ஓராண்டோ அல்லது மறு உத்தரவு வரும் வரையோ பணியாற்ற பணிக்கப்பட்டுள்ளேன். விஷயம் இவ்வாறிருக்கையில், தமிழக அரசு எப்படி என்னை, சிறப்பு அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவிக்க முடியும்? தமிழக அரசா என்னை நியமித்தது?
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நீங்கள் சாதித்தது என்ன?
சிறப்பு அதிகாரியாக, ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டேன். ஆனாலும், என்னை வழக்கு வேலையே பார்க்க விடாமல் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாக்கினர். எனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகளையே எனக்கு எதிராக துாண்டிவிட்டு, பேட்டி அளிக்கச்செய்து, துறைசார்ந்த சதி செய்தனர். அந்த நபர்களை கூண்டோடு மாற்றிவிட்டு வேறு அதிகாரிகளை, போலீசாரை அரசிடம் போராடி பெற்று, மீண்டும் பணியைத் துவக்கவே வெகு நாட்களாகிவிட்டது. துரோகிகளுடன், ‘மாரடி’த்து, போராட வேண்டியிருந்தது.
அதன்பின், எனது நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதற்கும் டில்லிக்கு அலைய வேண்டியிருந்தது. இதற்கிடையே, தமிழக காவல்துறை உயரதிகாரிகளின் குடைச்சல் வேறு. அதனால், நான் நியமிக்கப்பட்டு பல மாதங்களாக முறையாக பணியாற்றவே இயலாத சூழ்நிலை. கடந்து ஐந்து மாதங்களாக உருப்படியாக வேலை செய்ய முடிந்தது. நான்கு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு கோர்ட்டில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது; 56 சாட்சிகள், நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளனர்; 272 சாட்சிகள், நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். முக்கிய வழக்குகளில், விலைமதிப்பற்ற, 12 சிலைகளை மீட்டுள்ளோம்; அதில் ஒன்று, 30 கோடி ரூபாய் மதிப்புடையது.
நெல்லை, குலசேகரமுடையார் அறம்வளர்த்த நாயகி சிவன் கோவிலில், 1982ல் திருட்டுப்போன பஞ்சலோக நடராஜர் சிலையும் அதில் அடக்கம். ஆஸ்திரேலியாவிலிருந்து இதை நாங்கள் கொண்டுவர பட்டபாடு இருக்கிறதே, கஷ்டம் சொல்லி மாளாது. இந்த சிலையை மீட்டு வர தமிழக அரசு நிதி தரவில்லை. தொந்தரவே தந்தது. இதுபோல இன்னும் சொல்ல எவ்வளவோ உள்ளன. அந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
சிறப்பு அதிகாரியாக இன்னும் செய்ய விரும்புவது?
நமது பழங்கால பொக்கிஷங்களாக விளங்கும் சுவாமி விக்ரகங்கள் நுாற்றுக்கணக்கில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. ஆவண ரீதியாக சிங்கப்பூரில் இருந்து, 16 சிலைகள் உள்பட எண்ணற்ற சிலைகளை மீட்டு வர வேண்டியுள்ளது. இந்த பதவியில் நீடிக்க வேண்டுமென்பது எனது விருப்பம் அல்ல; எனக்கு பொருளாதார ரீதியாக எந்த பயனும் இல்லை.உண்மையைச் சொல்லப்போனால், நான் அரசாங்கத்திடம் இருந்து, அதாவது மக்கள் வரிப்பணத்தில் இருந்து, ஒரு ரூபாய் கூட ஊதியம் பெறாமல்தான், சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். இதற்குமுன், ரயில்வே ஐ.ஜி.,யாக இருந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கூடுதல் பொறுப்பாக கவனித்தபோதும் அதற்குரிய ஊதியத்தை பெறவில்லை. ஏறத்தாழ, 40 லட்சம் ரூபாயை ஊதியமாக பெறாமல், கடவுளுக்கு ஆற்றும் பணியாக இவ்வேலையை செய்கிறேன்.
தற்போதும்கூட, வழக்கு விஷயமாக டில்லிக்கு வந்துள்ளேன். சொந்த காசில்தான் வந்துள்ளேன். வழக்குகளின் முக்கிய ஆவணங்களை ஜெராக்ஸ் எடுக்கவே, 8000 ரூபாய் செலவாகிவிட்டது. வழக்கறிஞர் ஒருவர்தான் உதவினார். இதுதான். எதார்த்த நிலை. நான் பதவிக்கும், பணத்துக்கும் ஆசைப்படுபவன் அல்ல.
தமிழக அரசுடன் மோதல் ஏன் ?
மோதல் ஒன்றுமில்லை. நான் எனது கடமையை செய்கிறேன். கோர்ட் என்னை நியமித்த போது, பிறப்பித்த உத்தரவுகளை தவறாது கடைபிடித்து வருகிறேன். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., எனக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. அவர், வழக்கின் போக்கு குறித்த விவரங்களை கேட்கிறார்; மீட்டிங் வருமாறு அழைக்கிறார்; அடுத்தது யார், யாரை கைது செய்யப்போகிறீர்கள் என கேட்கிறார்.
இப்படி ஒரு அதிகார அமைப்பின் கீழ்தான் பணியாற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் எனக்கு விதிக்கப்பட்டிருந்தால், சிறப்பு அதிகாரி பொறுப்பையே ஏற்றிருக்க மாட்டேன். சுதந்திரமான, நேர்மையான விசாரணை தேவை என்பதால்தானே, கோர்ட் என்னை நியமித்தது. என் சுதந்திரமான விசாரணையில் அரசு ஏன் தலையிடுகிறது? அந்த அதிகாரி ஏன் மூக்கை நுழைக்கிறார்? அதுதான் பிரச்னையே. இவ்வாறு, அவர் தெரிவித்தார்..
______________________
.