கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தோடு இளையரசனேந்தலை இணைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தோடு இணைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தோடு இணைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டச் செயலர் பாபு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், இளையரசனேந்தல் குறுவட்டத்தை குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நீக்கி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தோடு இணைக்க வேண்டும், 2018 – 19ஆம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கட்சியின் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், நகரச் செயலர் சரோஜா, மாவட்ட உதவிச் செயலர் சேதுராமலிங்கம், வட்ட உதவிச் செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.