சாத்தான்குளம் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி?எஸ்ஐ பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக மற்றொரு எஸ்ஐ பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் கண்டனங்களை எழுப்பியுள்ளது
மேலும் திரை பிரபலங்களும் இதுகுறித்து அழுத்தத்தை கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அவர்கள் மோசமாக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக 12 குழுவினர் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவில்பட்டி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினரிடமும் அவர்கள் வைத்திருந்த செல்போன் கடையிலும் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் இருவருக்கும் சிகிச்சை அளித்த மருத்துவர், எழுத்தரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சாத்தான்குளம் எஸ்ஐ ரகு கணேஷ் நேற்று சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி ஹேமா முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஜூலை 16ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே மற்றொரு எஸ்ஐ பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், மற்றொரு காவலர் முத்துராஜ் ஆகியோர் தலைமறைவாகினர்.இந்த நிலையில் பாலகிருஷ்ணன், முருகன் ஆகியோர் இன்று அதிகாலை வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அது போல் தலைமறைவாக உள்ள மற்றொரு காவலரான முத்துராஜை தேடும் பணி தீவிரமாகியுள்ளது.
சிபிசிஐடி வசம் இந்த வழக்கு சென்றவுடன் அடுத்தடுத்த திருப்பங்கள் நடக்கின்றன.