குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்கத்தக்கது அல்ல:புதிய அரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய், திட்டவட்டம்
சென்னை: புதிய அரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கட்சி தொடங்கிய பின்னர் அவர் முதன்முறையாக அரசியல் ரீதியில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதிலும், மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு எதிராக அவர் குரல் கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக திங்கட்கிழமை இரவு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விஜய்யும் தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
“பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்கத்தக்கது அல்ல,” என்று விஜய் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவில் மக்கள் அனைவரும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் சூழல் நிலவுவதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, குடியுரிமை திருத்தச்சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்துவிடும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே வழிவகுக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.