கோபத்தில் குத்தியதால் காயம் மார்க்ரம் தென்னாப்பிரிக்கா திரும்பினார்
???கோபத்தில் குத்தியதால் காயம்: நாடு திரும்பினார் தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம்!
காயம் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் விலகியுள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கான போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இப்போது நடந்து வருகிறது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ராஞ்சியில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாளை விளையாடுகிறது.
இந்த தொடரில், தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்கார் மார்க்ரம் சரியாக ஆடவில்லை.
முதல் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்கள் எடுத்தார்.
2வது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆனார்.
இரண்டாவது இன்னிங்ஸில் அவர் எல்பிடள்யூ முறையில் ஆட்டமிழந்ததும் எதிர்முனையில் இருந்த சக ஆட்டக்காரர் டீன் எல்கரிடம் விவாதித்துவிட்டு அப்பீல் கேட்காமல் வெளியே சென்றார்.
ஆனால், டிவி ரீப்ளேவில் அவர் ஆட்டமிழக்கவில்லை என்று தெரிந்தது.
இதனால் டிரெஸ்சிங் ரூம் சென்ற அவர், ஆத்திரத்தில் திடமான பொருள் ஒன்றின் மீது கையால் குத்தினார்.
இதில் அவரது மணிகட்டில் காயம் ஏற்பட்டது.
மருத்துவ பரிசோதனை செய்தபோது லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.
இதனால் அவர், கடைசி டெஸ்ட் போட்டி யில் இருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.
அவருக்குப் பதிலாக வேறு வீரர் நியமிக்கப் படவில்லை.
சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், ஆத்திரத்தில் டிரெஸ்சிங் ரூம் சுவரில் கையால் குத்தியதில் காயமடைந்தார்.
அதே போல இப்போது மார்க்ரமும் காயமடைந்துள்ளார்.