கயத்தாரில் ‘சோலார் பேனல்’ அமைக்க எதிர்ப்பு- விவசாயிகள் தர்ணா போராட்டம்
கயத்தாறு:தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அய்யானார் ஊத்து, வடக்கு செழியநல்லூர் கிராமங்களுக்கு இடையே ஏராளமான விவசாய பட்டா நிலங்கள் உள்ளது.இந்த நிலங்களில் திடீரென இரவோடு இரவாக தனியார் நிறுவனம் சார்பில் சோலார் அமைக்கும் பணிகள் தொடங்கியதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.இதனை கண்டித்தும் சில விவசாயிகள் இன்று தங்களது விவசாய நிலங்களில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-எங்கள் பகுதியில் சோலார் பேனல் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏராளமான விவசாய நிலங்களிலும், இப்பகுதிகளில் உள்ள சிறு ஒடை, ஊரணிகளை அழித்தும் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து காவல்துறை, வருவாய்துறையில் புகார் தெரிவித்தும் அதுகுறித்து நடவடிக்கை இல்லை. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.