புலிகள்இயக்கத்தை செயல்பட வைக்கமுயற்சி2 எம்.எல்.ஏக்கள் உட்பட 7பேர்கைது
winmeennews.com விரைவு செய்திகள்.
மலேசியா: புலிகள் இயக்கத்தை செயல்பட வைக்க முயற்சி- 2 எம்.எல்.ஏக்கள் உட்பட 7 பேர் கைது
கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை செயல்பட வைக்க முயற்சித்ததாக 2 சட்டசபை உறுப்பினர்கள் உட்பட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் நேற்று தேடி தேடி கைது செய்யப்பட்டனர். நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை இக்கைது நடவடிக்கை நீடித்தது.
புலிகளுடன் தொடர்பு என்கிற குற்றச்சாட்டின் கீழ் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மலாக்கா ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஜி. சாமிநாதன், நெகிரி செம்பிலான் மாநிலம் சிரம்பான் ஜெயா சட்டசபை உறுப்பினர் குணசேகரன் முக்கியமானவர்கள் என கூறப்படுகிறது.
கெடா, கோலாலம்பூர் மற்றும் பேராக் மாநிலங்களில் தலா ஒருவரும் சிலாங்கூரில் மட்டும் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் 2 எம்.எல்.ஏக்களும் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இது தொடர்பாக புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு தலைவர் அயூப்கான் மைதீன் பிச்சை கூறியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் செயல்பட வைக்க சில வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. இது தொடர்பாக ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் கண்காணித்து வந்தோம்.
மலேசியாவில் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம். ஆகையால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அயூப்கான் கூறினார்.