போன் செய்தால் வீடு தேடி சாப்பாடு வரும் வட்டச்செயலாளர் வண்டுமுருகன் டிபன் கடை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
போன் செய்தால் வீடு தேடி சாப்பாடு வரும் வட்டச்செயலாளர் வண்டுமுருகன் டிபன் கடை
திருவில்லிபுத்தூர் வாலிபர் அசத்தல்
திருவில்லிபுத்தூரில் வாலிபர் ஒருவர் வாடிக்கையாளர்களை கவர ‘வட்டச்செயலாளர் வண்டுமுருகன்’ டிபன் கடை என ஆரம்பித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் வடக்கு ரத வீதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடையில் போதிய வருமானம் இல்லை. எனவே வருமானத்திற்கு வழி தேடி மாற்று யோசனையில் ஈடுபட்டார். இறுதியில் தனது கடை முன்பு டிபன் கடை போட முடிவு செய்தார்.
இதன்படி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கடையின் பெயரை வடிவேலு காமெடி கேரக்டரான ‘வட்டச்செயலாளர் வண்டு முருகன்’ டிபன் கடை என வைத்துள்ளார். கடையின் பெயர் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதால், மக்கள் விரும்பி வந்து சாப்பிட்டு செல்கின்றனர். இதுகுறித்து சுப்பிரமணி கூறுகையில், ‘‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் வீட்டை விட்டு அதிகம் வெளியே வரக்கூடாது. எனவே எனக்கு ஒரு போன் செய்தால் வீடு தேடி உணவு வகைகளை டோர் டெலிவரி செய்து வருகிறேன். அது 2 இட்லி என்றாலும் ஓகேதான். ஊரடங்கு நேரத்தில் இதன் மூலம் ஓரளவிற்கு வருமானம் கிடைக்கிறது’’ என்றார்