அன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை?கனிமொழிMP பொளேர் குற்றச்சாட்டு?
அன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை.. அன்று மட்டும் வந்து துரோகம் செய்தார்.. கனிமொழி பொளேர்.
சென்னை: நாங்கள் பாமகவின் ராஜ்யசபா எம்பி அன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை ஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு வாக்களிக்க மட்டும் அவைக்கு வந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார் என்று திமுக எம்பி கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் இன்று தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது.
திமுகவின் முக்கிய எம்பிக்கள் ஆ.ராசா , கனிமொழி, தயாநிதி மாறன், திருச்சி சிவா ஆகியோர் சென்னையிலும் திருச்சியிலும் போராட்டம் செய்து வருகிறார்கள். மாநிலம் முழுக்க இருக்கும் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் தலைமையிலும், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தலைமையிலும் போராட்டம் நடந்து வருகிறது.
கனிமொழி என்ன பேசினார்
இதில் சென்னையில் போராட்டத்தின் போது பேசிய கனிமொழி, அதிமுக தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. மிக முக்கியமான ஈழ தமிழர்களுக்கு கடுமையான துரோகம் இழைத்துவிட்டது. அவர்களின் ஓட்டுரிமை தொடங்கி அவர்களின் வாழும் உரிமை அதிமுக பறிக்க பார்க்கிறது.
பாமக எப்படி
நாங்கள் பாமகவின் ராஜ்யசபா எம்பி அன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை. ஒருநாள் கூட அவர் அவைக்கு வந்தது இல்லை. தமிழகத்தில் என்ன பிரச்சனை நடந்தாலும் அவர் அவைக்கு வர மாட்டார். எப்போதும் அவர் தலைமறைவாக இருந்தார்.
சட்டம்
ஆனால் அப்படி தலைமறைவாக இருந்தவர் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு வாக்களிக்க மட்டும் அவைக்கு வந்தார். சரியாக அன்று அவைக்கு வந்து, மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். வேண்டும் என்றே அன்புமணி தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார்.
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்
நாம் வாக்களித்து அனுப்பிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைத்து இருந்தால் இந்த சட்டம் அமலாகி இருக்காது. ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றிவிட்டனர். குடியுரிமை சட்ட திருத்தம், நாட்டில் அனைவரும் சமம் என்று சொல்வதற்கு எதிரானது. மக்களை இது மொத்தம்மாக பிரிக்கிறது. உலக நாடுகள் இதனால் இந்தியாவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளது.