சிவகாசி அருகே 4 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
கிணற்றில் தள்ளி சிறுவன் கொலை: 2 சிறுவர்கள் கைது
சிவகாசி: சிவகாசி அருகே 4 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன்(30). பட்டாசு ஆலை வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பிரியதர்ஷன்(8), தீனதயாளன்(4) ஆகிய இரண்டு மகன்கள். வீட்டின் அருகே விளையாடிய தீனதயாளன் நேற்று மாலை முதல் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து சிவகாசி டவுன் போலீசில் பார்த்திபன் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். தொடர்ந்து சிறுவன் விளையாடிய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பார்த்திபன் வீடு அருகே வசிக்கும் அல்போன்சாவின் பேரன் 13வயது மற்றும் 11வயது சிறுவர்கள் இருவரும் தீனதயாளளை அழைத்துக் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து, 2 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பிடிபட்ட சிறார்கள் போலீசாரிடம் கூறியதாவது: சம்பவத்தன்று அல்போன்சா (53) வீட்டு முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ள மணலில் தீனதயாளன் விளையாடி உள்ளான். இதை அல்போன்சா கண்டித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அல்போன்சாவுக்கும், தீனதயாளன் பாட்டி லட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவர்கள் இருவரும் கலைந்து சென்றனர். சம்பவத்தை பார்த்துக் கொண்டு இருந்த அல்போன்சாவின் பேரன் தனது நண்பர் 11வயது சிறுவனை வரவழைத்துள்ளார்.
இவர்கள் தீனதயாளனை அழைத்து சென்று கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றிலிருந்து தீனதயாளன் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, 2 சிறுவர்களையும் கைது செய்தனர். 4வயது சிறுவன் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.