ஆடிட்டர்குருமூர்த்திக்கு எதிராக போலீஸ் கமிஷனரிடம் புகார் ?
ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிராக போலீஸ் கமிஷனரிடம் புகார்
ஆட்சியைக் கலைக்க சதி வேலையில் ஈடுபட்டதாக, துக்ளக் குருமூர்த்தி மீது வழக்கறிஞர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
துக்ளக் வார இதழ் பொன்விழா திருச்சியில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தரக்குறைவாக பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.
குருமூர்த்தியின் வார்த்தை பிரயோகம் மோசமாக இருந்ததை பலரும் சுட்டிக்காட்டி , விமர்சித்தனர். அண்ணா திமுக சார்பிலும், அமைச்சர் ஜெயக்குமார் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பின், குருமூர்த்தி இதுதொடர்பாக விளக்கம் கொடுத்தார். அதாவது ஒ.பன்னீர் செல்வத்தை அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்றார்.
இந்நிலையில், சட்டப்படி அமைக்கப்பட்ட ஆட்சியை வீழ்த்த சதி வேலைகளில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று காலையில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக பேசிய வழக்கறிஞர் மில்டன், “பத்திரிக்கை நடத்துவது என்ற பெயரில், சட்டவிரோத, தேசத்துரோக, சமூக விரோத, திரைமறைவு வேலைகளைச் செய்து வரும் துக்ளக் குருமூர்த்தி, சட்டப்படி அமைக்கப் பெற்ற அரசை தூக்கி எறிய தான் செய்த சதிவேலைகள் பற்றி அண்மையில் பகிரங்கமாக பேசியுள்ளார்.
அவரும், அவரோடு சதியாலோசனையில் ஈடுபட்டவர்களை பற்றியும் முழுமையாக உரிய முறையில் விசாரணை நடத்தக் கோரி புகார் கொடுக்க, ஜனநாயகத்துக்காக போராடும் வழக்கறிஞர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளோம் என்றார்.
29/11/2019
.