உலகத்திலேயே சந்தோசமான மனிதர், இன்று நானாகத்தான் இருப்பேன் என்று தேவேந்திர பட்னாவிஸின் பதவி விலகல் குறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி டிவிட் செய்துள்ளார்.
மகாராஷ்டிராவின் துணை முதல்வர் பதவியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவி விலகினார்.
அவரை தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகினார்.
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க இருக்கிறார். இவருக்கு தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் – சிவசேனா ஆகிய கட்சிகளின் ஆதரவு இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி டிவிட் செய்துள்ளார்.
அதில், தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகியதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. உலகத்திலேயே சந்தோசமான மனிதர் இன்று நானாகத்தான் இருப்பேன். அவர் தான் என்னுடைய ஆட்சியை கர்நாடகாவில் கவிழ்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ? அதை எல்லாம் செய்தார். காலம் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும், என்று குமாரசாமி டிவிட் செய்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமியின் மஜதா கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து ஆட்சியை அமைத்தது. ஒரு வருடம் அங்கு இந்த கூட்டணி ஆட்சி நிலைத்தது. ஆனால் பாஜகவின் ஆபரேஷன் கமலா மூலம் இந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது. 17 காங்கிரஸ் – மஜத எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கி, பதவி விலகினார்கள். இதனால் அங்கு பாஜகவின் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி அமைந்தது. இந்த 17 எம்எல்ஏக்களும் மும்பையில் தான் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த ரிசார்ட் அரசியல்தான் கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்த்தது. அப்போதைய பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தான் இந்த ஹோட்டலுக்கு போலீஸ் மூலம் பாதுகாப்பு வழங்கினார் என்று புகார் எழுந்தது. அதை சுட்டிக் காட்டும் வகையில் தான் தற்போது குமாரசாமி இப்படி டிவிட் செய்து, கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.