விளாத்திகுளம் எம்.எல்.ஏ ஆய்வு? கிராம சாலைகள் துண்டிப்பு? படகு மீன்பிடி உபகரணம் சேதம்?
தொடரும் மழை – விளாத்திகுளம் அருகே கிராம சாலைகள் துண்டிப்பு – படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதம் – எம்.எல்.ஏ. ஆய்வு
கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது பெய்த கன மழையினால் விளாத்திகுளம் தொகுதி முழுவதும் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் மந்திகுளம் கிராம தார்சாலை காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் சாலையின் நடுப்பகுதியில் பத்து மீட்டர் நீளத்துக்கு மண் அரிப்பு ஏற்பட்டு வழித்தடம் துண்டிக்கப்பட்டுள்ளது.மேலும் சாலை நெடுகிலும் இருபுறங்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மந்திகுளம் கிராமத்துக்கு செல்வதற்கு மாற்றுப்பாதை ஏதும் இல்லாத காரணத்தினால் கிராமமே தனித்தீவாக உருவெடுத்துள்ளது. இதுதவிர மழைநீர் கடலில் கலக்கும் கீழ வைப்பாரில் ஆற்று முகத்துவாரம் பகுதியில் மணல்மேடுகள் குவிந்திருந்த காரணத்தினால் நள்ளிரவில் மழைநீர் கிராமத்துக்குள் புகுந்தது. இதன் காரணமாக ஆற்று முகத்துவாரம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் மீன்பிடி வலைகள் அனைத்தும் சேதமடைந்தன. வேப்பலோடையில் கண்மாய் நிரம்பி கரையில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளை விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. சின்னப்பன் தலைமையில் வட்டாட்சியர் ராஜ்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேலு மற்றும் பொதுப்பணித் துறை மீன்வளத் துறை அதிகாரிகள் மழை பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை மேற்கொண்டனர். கீழவைப்பாரில் சேதமடைந்த படகுகள் வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருவதற்கு ஆவண செய்யப்படும் என மீனவர்களிடம் உறுதியளித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் பி சின்னப்பன் விளாத்திகுளம் தொகுதி முழுவதும் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. நள்ளிரவில் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சில கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன கடலோர கிராமங்களில் பாதிப்புகள் உள்ளன. மழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் அந்தந்த பகுதிகளுக்கு விரைந்து சென்று சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறோம். மழை பாதிப்பு மற்றும் சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் நிச்சயம் பெற்று தரப்படும் என்றார்.
ஆய்வின்போது வைப்பார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செண்பக ராஜா தருவைகுளம் கிளைச் செயலர் மாடசாமி வேப்பலோடை அன்னை தெரசா பொது நலச்சங்க செயலர் ஜேம்ஸ் ஒன்றிய மாணவரணி செயலாளர் ராமநாதன் ஜெயலலிதா பேரவைச் செயலர் சுபாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.