கோவில்பட்டியில் நாடு முழுவதும் சர்வதேச புலிகள் தினவிழா, விண்மீன் தேசீய கழகத்தின் வாழ்த்துகள்
கோவில்பட்டி:நாடு முழுவதும் ஜூலை 29-ந்தேதி புலி இனங்களை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளி சார்பில் சர்வதேச புலிகள் தினவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.விழாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புலி வேடம் அணிந்து புலிகள் வாழ்வதற்கு தேவையான வாழ்விடங்களை உருவாக்கிடவும், இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், புலி மற்றும் அனைத்து வகையான உயிரினங்கள் வாழ்வதற்கு உதவிடவும், புலிகள் வாழ காடுகளை பாதுகாத்திட மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கையில் பதாகைகள் ஏந்தி சென்றனர்.ஐ.சி.எம். பள்ளி செயலாளர் என்ஜினீயர் நடராஜன் தலைமை தாங்கினார். நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன், சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ராதா வரவேற்றார். கோவில்பட்டி வனச்சரக வனவர் பிரசன்னா கலந்து கொண்டு உலக புலிகள் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் சவுந்தர பாண்டியன், பள்ளி ஆசிரியர்கள் அபிலாதி ரேஸ், சுப்புலட்சுமி, பத்மாவதி, செல்லம்மாள் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.