சத்தீஸ்கர்: பச்சிளம் பெண் குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்… வைரல் சம்பவமும் விசாரணையும்!
சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில் உள்ள சரிஸ்டல் கிராமத்தில் பிறந்து சில நாள்களே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் வயலில் கைவிடப்பட்ட நிலையில், பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளது. அந்தப் பச்சிளங்குழந்தை இரவு முழுவதும் ஒரு நாயின் அரவணைப்பில் அதன் குட்டிகளுடன் ஒரு குழந்தையாகக் கிடந்துள்ளது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் குழந்தையைக் கண்டபோது, முதலில் தெருநாய்கள் சுற்றித் திரிவதைக் கண்டனர். முதலில் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பின்பு அந்த நாய் (தாய்) தன் குட்டிகளுடன் இரவு முழுவதும் பாதுகாத்ததை அறிந்து நெகிழ்ச்சி அடைந்தனர்.
அங்குள்ள பொதுமக்கள் சிலர் கூறுகையில், “நாங்கள் வேலைக்காக வெளியே வந்திருந்தோம், காலை 11 மணியளவில் கிராமத்தில் நாய்களுக்கு மத்தியில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை ஒன்று கிடப்பதைப் பார்த்தோம். பின்னர், சுகாதாரத்துறைக்குத் தகவல் கொடுத்தோம். பின் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு ASI சிந்தாராம் பிஞ்ச்வார் ஒரு குழுவுடன் சம்பவ இடத்திற்கு வந்து பச்சிளங்குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்” என்று அங்குள்ள பொதுமக்கள் கூறியுள்ளனர்.