“அசுரன்” தனுஷ் அல்ல வெற்றிமாறன்.
தன் நிலத்தையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிற தாழ்த்தப்பட்டவனின் நியாயமான கோபமே ‘அசுரன்.
கோவில்பட்டி கதைக்களம். சாதிய வன்மத்தால் இரு சாதியினருக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை மிகவும் ஆழமாகவும், அழகாகவும் படமாக்கியுள்ளர் இயக்குனர் வெற்றிமாறன்.
ஆடம்பரமற்ற மக்கள்.எளிய வாழ்க்கை, பசப்பற்ற பேச்சு,பாசம் பொங்குகிற உறவுகள்,மானமும் ரோஷமும் உயிரென வாழ்கிற மனிதர்கள் என ஒவ்வொரு காட்சியையும் சரியான அளவோடு செதுக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள்.
சில நேரங்களில் சாதாரணமாக நடந்து விடும் ஒரு சம்பவத்தின் பின் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும். சில நேரங்களில் ஒரு குடும்பத்தையே அழித்து சின்னாபின்னமாக்கி விடும்.சில நேரங்களில் ஊர்ப் பகையாகி,இரு தரப்பினரும் மோதிக் கொண்டு, ஊரே அழிந்து சூனியமாகி விடும்.அப்படித்தான் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத ஒரு இளம் தலைமுறைக்கும், அடுத்தடுத்த விளைவுகளை உணர்ந்து வாழும் மூத்தத் தலைமுறைக்கும் இடையேயானப் போராட்டம் தான் அசுரன் திரைப்படம்.
சாதிய மோதல்களாலும், ஒடுக்குமுறைகளாலும் வாழ்வின் பெரும் பகுதியைத் தொலைத்து விட்ட சிவசாமி, பின் பகுதியில் தன்னுடையக் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ நினைக்கும் போது, அவன் சந்திக்கும் சம்பவங்கள் நம்மை பெரும் பதைபதைப்புக்குள் தள்ளுகிறது.
திரைக்கதையைத் தாண்டி இம்மியளவு கூட நம்மை யோசிக்க விடாமல் வைத்திருக்கிறது திரைக்கதை.ஒவ்வொரு நொடியும் பார்வையாளனை இயக்குனர் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்.
மூத்த மகனை பறி கொடுத்து விட்டு புத்தி பேதலித்துத் திரியும் மனைவி,துக்கம் தாளாமல் எந்நேரமும் குடித்து விட்டுத் தள்ளாடும் கணவன்,
அடுத்த மகனையும் இழந்து விடுவோமோ என்கிற பரிதவிப்பில் அல்லாடுகிற அப்பா…என அசுரன் கதை நம்மைக் கட்டிப் போடுகிறது.
தன் குடும்பத்தை நேசிக்கும் தகப்பனாக,அச்சு அசலான மண்ணின் மைந்தனாக ஒவ்வொரு காட்சியிலும் தனுசை வாழ வைத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.பன்றி வேட்டையில் தொடங்கும் தனுஷின் வெறித்தனம்,மனித வேட்டையில் உச்சம் தொடுகிறது. ஒவ்வொரு முறை தனுசின் கைகளுக்கு ஆயுதம் வரும் போதும், பல நூற்றாண்டுகளாக, தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் ஒவ்வொருத்தனின் குருதியும் கொந்தளிக்கிறது… நரம்புகள் முறுக்கேறுகிறது. திரையரங்கமே ஆத்திரத்திலும் கோபத்திலும் அதிருகிறது.திரையில் கதாபாத்திரத்தின் வெறித்தனத்தை விட பார்வையாளனின் வெறித்தனம் மிரட்டுகிறது.இது தான் அசலான,அசத்தலான ஒரு இயக்குனரின் வெற்றி.
கொலை செய்த பையனைக் காப்பாற்றுவதற்காக,பையனோடு காட்டுக்குள் மறைந்து திரியும் அப்பனாக தனுஷ் அசத்தி இருக்கிறார்.பயத்தோடு கூடிய நடை,சின்னச் சின்ன தடுமாற்றங்கள், கூர்மையான கண்கள்,முக பாவனைகள் எல்லாமே புதுசு.இது வரை பார்க்காத தனுஷ்.ஒரு இடத்தில் கூட தனுஷ் தெரியவே இல்லை. அந்த சிவசாமி கதாபாத்திரமாகவே வார்க்கப்பட்டு இருக்கிறார்.
”நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துக்குவானுங்க… ரூவா இருந்தா புடுங்கிக்குவானுங்க… படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது’’ என்ற வசனம், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி தான் பெரும் ஆயுதம் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார் இயக்குனர்.
தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்த நிலங்கள், ஆதிக்க சாதியினரிடம் எப்படிப் போனது?செருப்பு கூட அணிய விடாமல் அடிமையாக வைத்திருந்த விதம்,தாழ்த்தப்பட்ட மக்களின் உழைப்புச் சுரண்டல், என்ன தான் அன்பு காட்டுவது போல் நடித்தாலும், தாழ்த்தப்பட்டவர்களை ஆதிக்க சாதி வெறியர்கள் எப்படி பாரபட்சத்தோடு நடத்துகிறர்கள், போராட்டத்தின் மூலமே உரிமைகளைப் பெற முடியும்,கல்வியைப் எவனாலும் பிடுங்க முடியாது, தாழ்த்தப்பட்டவன் பொங்கி எழுந்தால் ஆதிக்க சாதி திமிரெல்லாம் தவிடு பொடியாகி விடும் எனப் பல்வேறு அரசியல்களை வலியோடு அப்பட்டமாகப் பேசுகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
இப்படித் தாழ்த்தப்பட்ட, அடித்தட்டு மக்களின் குரல்களை ஆழமாகப் பேசிய தமிழ்ப் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அதில், இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது இயக்குனர் வெற்றிமாறனின் அசுரன் திரைப்படம்.
படம் பார்த்து முடித்த போது நாவலைப் படித்து முடித்தத் திருப்தியைத் தருகிறது.
அசுரன்,ஆடுகளத்தை விட அதிகம் தேசிய விருதுகளை அள்ளிக் கொண்டு வரும் என்பது உறுதி.
இயக்குனர் வெற்றிமாறன் இந்திய சினிமாவின் நம்பர் ஓன் இயக்குனர் என்பதை மீண்டும் ஒருதடவை நிரூபித்துள்ளார்.
வாழ்த்துகள் வெற்றிமாறன் சார்.
அசுரனில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
-சோழன் மு.களஞ்சியம்.
திரைப்பட இயக்குனர்.