ரத்த சிவப்பு நிறமாக காட்சியளித்த இந்தோனேஷியா வான்பரப்பு.
இந்தோனேஷியா வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக, அந்நாட்டின் வான்பரப்பு ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தோனேஷியாவில் வறண்ட வானிலை நிலவும் போது, ஜூலை முதல் அக்டோபர் மாதங்களில் வனப்பகுதிகள் தீப்பற்றி கரும்புகை வெளியேறுவதுண்டு. அந்தவகையில் இந்த ஆண்டு வனப்பகுதிகளில், பல ஹெக்டேர் பரப்பளவு நிலத்துக்கு தீப்பற்றி எரிந்து வருகிறது. இதனால் வானில் கரும்புகை வெளியேறி வருகிறது. பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மக்கள் மூச்சுத் திணறல், தொண்டை அழற்சி மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதியுற்று வருகின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் முகமூடி அணிந்தபடி நடமாடி வருகின்றனர். இந்தநிலையில், புகை படிந்திருக்கும் இந்தோனேஷியா வான் பரப்பு, கடந்த சனிக்கிழமை ரத்த சிவப்பு நிறத்துக்கு மாறியது.
இதனைப் படம் பிடித்த ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்டதை அடுத்து பலரும் அதிர்ச்சி தெரிவித்து, புகைப்படங்களை மறுபதிவிட்டு வந்தனர். சுமார் 34,000 முறை அந்த பதிவு மறுபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வானில் சிவப்பு நிறம் தோன்றியதற்கு ‘ரேலே சிதறல்’ தான் காரணம் என அந்நாட்டு வானிலை மையம் கருத்துத் தெரிவித்துள்ளது. குறிப்பாக மாசு துகள்கள் மீது ஒளிக்கற்றைகள் பாய்ந்து ஒளிச்சிதறல் ஏற்படுத்தியதே இந்த நிகழ்வு தோன்ற காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.