பாரதியார் வாழ்ந்து புகழ்பெற்ற, எட்டையாபுரத்தில் ,ஓடும் பஸ்சில் கண்டக்டருக்கு திடீர் உடல் நலக்குறைவு; உயிரை காக்க உதவிய பயணிகளுக்கு பாராட்டு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
ஓடும் பஸ்சில் கண்டக்டருக்கு திடீர் உடல் நலக்குறைவு; உயிரை காக்க உதவிய பயணிகளுக்கு பாராட்டு*
எட்டயபுரம்:
தூத்துக்குடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் டிரைவராகவும், அதே ஊரை சேர்ந்த தேவராஜ் என்பவர் கண்டக்டராகவும், மாற்று டிரைவராகவும் இருந்தார். பஸ்சில் 37 பயணிகள் இருந்தனர்.
எட்டயபுரம் அருகே பஸ் வந்தபோது டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருந்த கண்டக்டர் தேவராஜூக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு பஸ்சுக்குள் ரத்த வாந்தி எடுத்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று கூறினர். பஸ்சை எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து ஓட்டி செல்லும்படி தெரிவித்தனர்.
அதன்படி பஸ் எட்டயபுரம் அரசு மருத்துவமனையை அடைந்ததும், பயணிகள் கண்டக்டரை பாதுகாப்பாக அழைத்து சென்று அங்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உதவியாக டிரைவரையும் பயணிகள் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கண்டக்டர் தேவராஜ் அபாய கட்டத்தை தாண்டிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே பஸ்சுக்கு மாற்று டிரைவர் வரும் வரை பயணிகள் பொறுமையாக காத்திருந்து சில மணி நேரம் கழித்து சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட கண்டக்டரின் உயிரை காப்பாற்ற உதவிய பயணிகளின் மனிதாபிமான செயலை போக்குவரத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.