போயஸ் கார்டன் வீட்டில் அத்தை பயன்படுத்திய பொருட்கள் எதுவும் இல்லை -ஜெ.தீபா பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை:
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடைமை ஆக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் 3 வாரங்களுக்குள் வீட்டு சாவியை ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தின் சாவியை, தீபா மற்றும் தீபக்கிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி வழங்கினார். பின்னர் அவர்கள் இருவரும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்துக்கு வந்தனர்.
அப்போது வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் தீபா, தீபக் மற்றும் தீபாவின் கணவர் மாதவன் உள்ளிட்டோர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர்.
அதிகாரிகள் முன்னிலையில் வீட்டில் உள்ள பொருட்கள் குறித்து தீபா, தீபக்குக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் வீட்டின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தீபா, போயஸ் கார்டன் இல்லம் யாரும் வசிக்க முடியாத அளவிற்கு பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடப்பதாக கூறினார்.
‘அத்தை பயன்படுத்திய பொருட்கள் எதுவும் இங்கு இல்லை. அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீட்டை சீரமைக்க வேண்டும். அதற்கு நீண்ட காலம் ஆகும். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இந்த விசாரணையை தமிழக அரசு முறையாக நடத்த வேண்டும்’ என்றும் தீபா கேட்டுக்கொண்டார்.
பின்னர், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு ஜெ.தீபா அளித்த பேட்டியில், ‘நீதிமன்ற தீர்ப்புக்கு பின், சாவியை எங்களிடம் அரசு ஒப்படைத்துள்ளது. எங்களுக்கும் சசிகலா குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்தன. இப்போது நான் அவருக்கு ஆதரவாகவும் இல்லை, எதிராகவும் இல்லை’ என்று தெரிவித்தார்.