டிரம்ப் தலைக்கு ரூ.576கோடி ஈரான் விலை அறிவிப்பு – உலகஅரசியலில் பரபரப்பு?
டிரம்ப் தலைக்கு ரூ.576 கோடி: ஈரான் விலை.
டெஹ்ரான்: அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, ஈரான் முக்கிய படைத் தளபதி குவாசிம் சுலைமானி உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.576 கோடி பரிசு வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை, அமெரிக்கா ரத்து செய்தது. அதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்த மோதல் சமீபத்தில் தீவிரமடைந்தது. ஈரான் ராணுவத்தின் குத்ஸ் படைப் பிரிவின் தளபதி குவாசிம் சுலைமானி, சமீபத்தில் ஈராக் சென்றிருந்தார். அப்போது அமெரிக்க படைகள், ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில், அவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக அமெரிக்காவை பழிவாங்குவோம் எனவும் எச்சரித்தது.
இந்நிலையில், சுலைமானி உடல், அஹ்வாஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், தெஹ்ரானில் உள்ள என்கேலாப்-இ-எஸ்லாமி (இஸ்லாமிய புரட்சி) சதுக்கத்தில் நடந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சுலைமானியின் உடல் கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் அந்நாட்டின் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பானது.
அப்போது பெயர் வெளியிடப்படாத மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 8 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.576 கோடி) பரிசாக வழங்கப்படும். ஈரானில் 8 கோடி மக்கள் உள்ளனர். அவர்களிடம் இருந்து தலா 1 டாலர் வீதம் 8 கோடி டாலர் பெற்று பரிசு வழங்கப்படும், என்றார்.