புதுச்சேரி மக்களை சீரழிக்கும்3எண் லாட்டரி வாலிபர் கைது?ரூ 34,550 பறிமுதல்?
புதுச்சேரி மக்களையும் சீரழிக்கும் 3 எண் லாட்டரி… வாலிபர் கைது.. ரூ. 34,550 பறிமுதல்!
புதுச்சேரி: புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் 3 எண் லாட்டரி விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூபாய் 34,550 பறிமுதல் செய்தனர்.
நேற்று விழுப்புரத்தில் நகைப்பட்டறை தொழிலாளி தடைசெய்யப்பட்ட 3 எண் லாட்டரி சீட்டு அடிமையாகி, அதில் தனது பணத்தை இழந்து, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாதால், தனது மூன்று குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்து கொன்றுவிட்டு, தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து அவரும் சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்.
லாட்டரி சீட்டால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் அரசால் தடைசெய்யப்பட்ட 3 எண் லாட்டரி விற்பனை கொடிகட்டி பறக்கிறது. லாட்டரி விற்பனையில் பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. புதுச்சேரியில் லாட்டரியில் பணத்தை இழந்து பலபேர் நடுத்தெருவுக்கும் வந்துள்ளனர்.
இதனிடையே குமரகுருபள்ளம் குடியிருப்பு பகுதியில் உள்ள இருசக்கரவாகனம் பழுது நீக்கும் கடை ஒன்றின் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்றுக்கொண்டு 3 எண் லாட்டரி சீட்டு விற்பதாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உயரதிகாரிகளின் உத்தரவின்படி பெரியக்கடை போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு ஒரு வாலிபர் கையில் காகிதம் மற்றும் கைபேசியுடன் நின்றுக்கொண்டிருந்தார்.
போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் குமரகுருபள்ளத்தை சேர்ந்த பாண்டியன் (எ) பாண்டிதுரை என்பதும், புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி சீட்டு விற்று வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து லாட்டரி சீட்டு எண்களை குறிக்க பயன்படுத்திய காகிதம், ஒரு கைப்பேசி, ரொக்கப்பணம் ரூ.35,550 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் சம்பவம் போன்று புதுச்சேரியிலும் நடைபெறாமலிருக்க, லாட்டரி விற்பவர்களை கண்காணித்து, பாராபட்சமின்றி கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.