பிரசவத்திற்கு வந்த பெண்ணின் கருப்பையில் பஞ்சு?தேனி மாவட்ட கூடலூர் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் மருத்துவர்களின் அலட்சியம்?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
பிரசவத்திற்கு வந்த பெண்ணின் கருப்பையில் பஞ்சு… அரசு மருத்துவர்களின் அலட்சியம்
தேனி மாவட்டம், கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவத்திற்காக வந்த பெண்ணின் கருப்பையை சுத்தம் செய்த அரசு மருத்துவர், அலட்சியமாக பஞ்சை உள்ளே வைத்து அனுப்பிய சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அப்பெண்ணின் கணவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த பேட்டி “என் பெயர் வாஞ்சிநாதன், மேலக்கூடலூர் மந்தை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவன் நான். விவசாயம் பார்க்கிறேன். எனக்கு முத்துச்செல்வி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். என் மனைவி மூன்றாவது முறையாக கருத்தரித் திருந்தார். கடந்த 23.04.2020 அன்று பிரசவவலி ஏற்பட்டு கூடலூர் ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு, காரில் அழைத்துச்சென்றேன். மருத்துவமனையை அடைந்ததும், காரிலேயே என் மனைவி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். செவிலியர்கள், தொப்புள் கொடியை வெட்டி, முதலுதவி செய்தனர்.
என் மனைவியைப் பரிசோதித்த மருத்துவர் காஞ்சனா, ’இதற்கு ஏன் இங்கே வருகிறீர்கள்? வீட்டிலேயே பிரசவம் பார்க்கவேண்டியது தானே…’ எனக் கடிந்துகொண்டார். தொடர்ந்து, என் மனைவியின் கருப்பையை சுத்தம் செய்தார். பின்னர், குழந்தை கருப்பைக் கழிவுகளை குடித்துவிட்டதாகக் கூறி, கம்பம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார். நாங்களும், அன்று இரவே, கம்பம் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு குழந்தைக்கு ஒன்றும் இல்லை, தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள் எனக் கூறினார்கள். 27.04.2020 அன்று என் மனைவியையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்துவந்தேன்.
வீட்டுக்கு வந்தது முதல், அடி வயிற்றில் கடுமையான வலி இருப்பதாகவும், உட்கார முடியவில்லை என்றும் என் மனைவி கூறிவந்தார். இந்நிலையில், நேற்று (15.05.2020) வலி தாங்க முடியாமல் மயங்கிவிழுந்தார். உடனே, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றேன். அங்கு என் மனைவியைப் பரிசோதித்த மருத்துவர், பிரசவத்திற்குப் பின் கருப்பையை சுத்தம்செய்தவர்கள், உள்ளே பஞ்சை வைத்துவிட்டனர் எனக் கூறி, ஒரு கைபிடி அளவு பஞ்சை என்னிடம் காட்டினார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை!. உடனே, கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று முறையிட்டேன். ஆனால், எனக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. கூடலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். நடவடிக்கை எடுப்பதாகக் கூறி என்னை அனுப்பிவிட்டனர். அப்போதும், எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நேராக, தேனி கலெக்டர் அலுவலகம் சென்றேன்.
துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வந்திருந்ததால், கலெக்டரை சந்திக்க முடியவில்லை. கலெக்டரின் உதவியாளரிடம் புகார் மனுவைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். நான் ஒரு விவசாயி. அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் சோறு. எங்களுக்கு ஏதாவது நோய் நொடி வந்தால், அரசு மருத்துவமனைக்குதான் போக வேண்டும். அங்கேயே இப்படி நடந்தால் நாங்க எங்கதான் போவோம்? என் மனைவிக்கு ஏதாவது நடந்திருந்தால் நானும் என் மூன்று குழந்தைகளும் என்ன செய்வோம். எங்களுக்கு நடந்தது மாதிரி யாருக்கும் நடக்கக்கூடாது!” என்றார் வேதனையோடு.
இது தொடர்பாக, தேனி மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்டவர் கொடுத்த மனு என் கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளை விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.