நீ நீயாக இரு மத்தவங்களாக நீங்கள் இருக்க முடியாது? அருமையான வாசகத்தை அனைவரும் அறிய?முழுவிளக்கம் – விண்மீன் நியூஸ்
நீ நீயாக இரு.. மத்தவங்களாக நீ இருக்க முடியாது.. இது ஆஸ்கர் வைல்ட் சொன்ன அருமையான வாசகம்.
இன்று நிறையப் பேருக்கு இந்த வாசகத்தை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
அவன் அப்படி இருக்கிறான், இவன் இப்படி இருக்கிறான். அவரைப் போல மாற வேண்டும். இவரைப் போல ஆக வேண்டும் என்று தான் பலரும் நினைக்கிறார்கள்
அங்கு தான் தவறு செய்கிறார்கள். சறுக்கலின் முதல் படியே அதுதான்.
உண்மையில் நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்களது அடையாளம், முகவரி அதுதான். உங்களிடமிருந்து தான் உங்களுக்கான அடையாளம் வெளிப்பட வேண்டும். யாருக்காகவும் உங்கள் தனித்துவத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் மற்றவரைப் போல் ஆக வேண்டும் என்பதை விட மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறமை இருக்கும் அதை வெளிக் கொணருங்கள்.
தனித்திறமைகளின் மூலமாக உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குங்கள். பல கோடி மக்கள் வாழும் நாட்டில் காமராஜர் ஆட்சியையும் எம்.ஜி.ஆர் ஆட்சியையும் கருணாநிதி ஆட்சியையும் நூறாண்டு காலம் ஆனாலும் நம்மால் அவர்களை மறக்க முடியாது.
காரணம் அவர்களுடைய ஆளுமைத்திறன் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு இருந்தது தான்.
அவர்களைப் போல உங்கள் திறமைகளின் மூலம் சாதனையாளராக மாறுங்கள். நடிகர் ரஜினிகாந்த் என்றாலே அவருடைய ஸ்டைலும் நடிகர் கமல்ஹாசன் அவர்களுடைய நடிப்புத் திறமையும் தல அஜித் அவர்களின் இயல்பான நடிப்பும் தளபதியின் நடன அழகையும் கண்டு மயங்காதவர்களே இல்லை.
இவர்களைப் போல நாமும் நம்முடைய திறமைகளை வெளிக் கொணர்வோம்.
வெளியே ஒரு இட்லி சாப்பிட்டால் நான்கு ரூபாயாவது கொடுக்க வேண்டும் ஆனால் கமலாத்தாள் பாட்டியிடம் இட்லி ஒரு ரூபாய் தான். அவருடைய இந்த நல்ல உள்ளம் தான் அவருடைய அடையாளம்.
இப்படி சாய்னா நேவால் சானியா மிர்சா கல்பனா சாவ்லா போன்ற பலர் தங்களின் திறமைகளின் மூலம் தங்கள் வாழ்க்கைப் பாதையை வெற்றிப் பாதையாக மாற்றியுள்ளனர்.
பிழைப்புக்காக நீங்கள் கிடைத்த வேலையைச் செய்தாலும் ஓய்வுநேரங்களில் உங்கள் திறமைகளை வெளிக்கொணருங்கள். அதுவே உங்களுக்கு ஒரு காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களைப் பார்த்து நான் அவர்களைப் போல் ஆக வேண்டும் என்றெண்ணாமல் அவர்களிடம் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயங்களை உங்கள் ஸ்டைலுக்கு ஏற்றவாறு மாற்றுங்கள்.
உங்களுக்குள் உறங்கிக் கிடக்கும் உங்கள் திறமைகளைத் தட்டி எழுப்புங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தை சாதனைப் பயணமாக மாற்றுங்கள். உங்கள் திறமையினால் உங்களுக்கொரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதில் கிடைக்கும் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை எனலாம்.
நீங்கள் எப்போதும் நீங்களாகவே இருங்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் சுயத்தை இழந்து விடாதீர்கள்