பணம் எடுக்கனுமா விட்டிற்கே வரும் ஏடிஎம் புதுவை பாரதியார் கிராம வங்கியின் புது முயற்சி?முழுவிபரம் – விண்மீன் நியூஸ்
காசு எடுக்கனுமா.. வீட்டிற்கே வரும் ஏடிஎம்.. புதுவை பாரதியார் கிராம வங்கியின் புது முயற்சி!
புதுச்சேரி:புதுச்சேரியில் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தடையின்றி உதவ நடமாடும் ஏடிஎம் சேவையை புதுவை பாரதியார் கிராம வங்கி ஏற்பாடு செய்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதில் மாஹே பிராந்தியத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். மேலும் நான்கு பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 3 பேர் மட்டுமே கொரோனா வைரசிற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைதொடர்ந்து புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
மேலும் புதுச்சேரியில் மக்கள் வெளியே வந்து பொருட்களை வாங்குவதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே மக்கள் வெளியே வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவது தொடங்கி அனைத்து பணிகளையும் முடித்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதில் தங்களுக்கு தேவையான பணத்தை ஏடிஎம் மையங்களில் எடுப்பதிலும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பிட்ட நேரம் மட்டுமே வெளியே வருவதற்கு அனுமதிக்கப்படுவதால், ஏடிஎம் மையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அலை மோதுகிறது.
இந்நிலையில் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில், இந்தியன் வங்கி மற்றும் நபார்ட் வங்கியின் வழிகாட்டுதல்படி, கொரோனா வைரஸ் தொற்று பயமுறுத்தலுக்கு ஒடுங்கி வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் புதுச்சேரி மக்களுக்கு தங்கு தடையின்றி உதவ புதுச்சேரி பாரதியார் கிராம வங்கி முன்வந்துள்ளது.
அதாவது வீடு வீடாக வங்கி பரிவர்த்தனை வழங்கும் பொருட்டு, புதுச்சேரியில் முதன் முறையாக நடமாடும் ஏடிஎம் சேவையை துவங்கியுள்ளது பாரதியார் வங்கி. இதனை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பாரதியார் கிராம வங்கி தலைவர் மார்க்கரேட் லெடிஷியா, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் வீரராகவன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அதிகாரி உமா குருமூர்த்தி மற்றும் வங்கியின் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறும்போது, புதுச்சேரி பாரதியார் கிராம வங்கியானது புதுச்சேரியில் 43 கிளைகளுடன் இயங்கி வருகிறது. வங்கியின் அனைத்து கிளைகளும் இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும் வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையின்றி அனைத்து சேவைகளையும் வழங்கி வருகிறது.
இந்த நடமாடும் எடிஎம் சேவை அனைத்து இடங்களுக்கும் குறிப்பாக வங்கி சேவை இல்லாத கிராமப்புற மக்களுக்கு உதவும் பொருட்டு ஊர் ஊராக நகர்ந்து செல்லும். அனைத்து மக்களும் வங்கியின் இச்சேவையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்து பயன்பெற முடியும் என தெரிவித்தனர்.
குறிப்பாக புதுச்சேரியில் கொரோனா நிவாரண நிதியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்ளுக்கும் 2 ஆயிரம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முதியோர் உதவித்தொகை, விதவை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பணம் உள்ளிட்டவை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் ஊரடங்கால், பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால், பயணாளிகள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஒருசிலர் அருகாமையில் உள்ள வங்கிகளுக்கு நடந்தே சென்று பணத்தை பெறுவதற்கு வங்கியின் முன் கூட்டமாக கூடுகின்றனர். இதனால் சமூக இடைவெளியும் கேள்விக்குறியாகிறது. இத்தகைய சூழலில் பாரதியார் வங்கி தொடங்கியுள்ள இந்த நடமாடும் ஏடிஎம் சேவை ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.