கலர் கோழிக் குஞ்சுகள் …………….
பனிக்காலம் வந்தாலே ஊர்ல தினமும் காலைல கலர் கோழிக் குஞ்சுகள் விக்கறவங்களை பார்க்கலாம். சைக்கிள் கேரியரில் அகலமான மூங்கில் கூடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக 2 அல்லது 3 கூடைகள நிறைய கோழிக் குஞ்சுகள் கொண்டு வருவாங்க. ஒரே சமயத்தில் 2 , 3 வியாபாரிகள் கூட ஒன்றாய் வந்து விற்பார்கள். பச்சை , சிவக்கு, நீலம், இளஞ்சிவப்பு , பழுப்பு என பல வண்ணங்களில் கோழிக் குஞ்சுகள் இருக்கும். எந்த வீட்டில் எல்லாம் பொடிசுகள் இருக்கிறார்களோ அவர்கள் வீட்டில் எல்லாம் இதற்கு டிமாண்ட் இருக்கும். எல்லோரும் வாங்கி வளர்ப்போம்.
கலர்க் கோழிக் குஞ்சுகள் வாங்கிய கொஞ்ச நாளிலேயே சாயம் வெளுத்துவிடும். சாயம் போனதும் எல்லா கலர்க் கோழிகளும் வெள்ளை நிறமாய் தான் இருக்கும்.
காலையில் எழுந்ததும் காலைக் கடன்கள் எல்லாம் முடித்து அவசர அவசரமாய் போய் கூண்டில் இருக்கும் கோழிக் குஞ்சுகளை கூட்டிக் கொண்டு வெளியே கிளம்பிவிடுவோம். வளர்க்க ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே நம்முடன் நன்கு பழகிவிடும். பிறகு நாம் எங்கு சென்றாலும் நம் கூடவே வரும்.
பிறகு கொஞ்சம் வெயில் அடிக்க ஆரம்பித்ததும் வீட்டிற்கு வந்து கோழிக் குஞ்சுகளை கூண்டில் அடைத்து விட்டு கூண்டை தொங்க விட்டு விடுவோம். பிறகு பள்ளிக்கு போய்விடுவோம். ஆனாலும் அதை பற்றிய எண்ணங்களே மூளையை ஆக்கிரமித்திருக்கும். எல்லா பயல்களும் கலர் கோழிக் குஞ்சுகள் வளர்ப்பார்கள் என்பதால் அவரவர் கோழிகள் பற்றிய பெருமைகள் பேசித் தீர்ப்போம்.
“ நான் என்ன சொல்றனோ அதத் தாண்டா என் கோழி கேக்கும்.. நான் கூப்டா வரும்.. எங்க பாப்பா(தங்கை) கூப்ட்டான்னா வரவே வராது..” என்பான் ஒருவன்.
“ டே… அதாவது பரவால்லடா.. எங்க கோழி செல்லு பூச்சிய(கரையான்) கீழ போட்டா தின்னாதுடா.. என் கைல வச்சா தான் நல்லா கொத்தி கொத்தி தின்னும்.. அதுக்கு என்னா கொழுப்பு பாத்தியாடா” என்பான் இன்னொருவன் பெருமையாக..
இப்படி ஏராளமான பேச்சுகள் அந்த கலர் கோழிக் குஞ்சுகளை வைத்து பேசப் படும். பின் பள்ளி முடிந்தவுடன் கோழிகளை அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவோம். மாலை நேரத்தில் அவ்வளவாக கரையான்கள் கிடைக்காது. எல்லாம் குழிக்குள் சென்றுவிடும். வெய்யில் காரணமாக இருக்கலாம்.. ஆனாலும் எங்கள் கோழிகளுடன் வெளியே சுத்துவது எங்களுக்கு பெருமை… இதில் வேடிக்கை என்னன்னா.. யாருமே கோழிகளின் முழு ஆயுளுக்கு அவற்றை வளர்த்ததில்லை.. பூனைகளிடம் இருந்து காப்பது அவ்வளவு சிரமம். அதில் தப்பினாலும் இருக்கவே இருக்கு பருந்துகள். எப்படி தான் கண்டுபிடிக்குமோ.. நாம் கொஞ்சம் அசந்தாலும் போதும்.. தூக்கிடும்.. அப்படியே அவைகளிடம் தப்பி வளர்த்தாலும் கொஞ்ச்ம பெரிசானவுடன் குழம்பாகிவிடும்.
அதை சாப்பிட்டுவிட்டு பள்ளியிலோ அல்லது பல பொடிசுகள் ஒன்றாய் இருக்கும் போதோ பேசிக் கொள்வோம்..
….”எங்க கோழில சுத்தமா எலும்பே இல்ல தெரியுமா?” என்பான் ஒருவன்.
…. போடா.. அன்னைக்கு எங்க அத்தூட்டார் (அத்தை வீட்டார்)வந்தப்போ எங்க கோழிய அறுத்துட்டோம். என்னா ருசி தெரியுமா?.. நாட்டுக் கோழி கூட அவ்ளோ ருசி இருக்காதுடா தம்பி.. நெனச்சிக்கோ..” என்பான் இன்னொருவன் பெருமையாக..✍??