சிவப்பு பாதரசம் விற்பனை – சேலத்தில் மோசடி கும்பல் சிக்கியது?
சிவப்பு பாதரசம் விற்பனை – மோசடி கும்பல் சிக்கியது.
சேலத்தில் கோடிக்கணகான ரூபாய் மதிப்புள்ள சிவப்பு பாதரசம் இருப்பதாக செல்போனில் காட்டியும், அதை விற்றுத் தந்தால் பல லட்சம் கமிஷன் தருவதாகக்கூறியும், மோசடியில் ஈடுபட முயன்ற 5 நபர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது செல்போனில் பேசிய ஒரு நபர் தன்னிடம், அணு ஆயுதம் மற்றும் புற்று நோய் உள்ளிட்ட மருத்துவத்துக்கு பயன்படும், சிவப்பு பாதரசம் இருப்பதாகவும், இது ஒரு மில்லி கிராம் ரூபாய் 3 கோடி வரை விற்கப்படுவதாகவும், இதை விற்று தந்தால் லட்சக்கணக்கில் பணம் கமிஷன் தருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
பின்னர் சேலத்தில் வைத்து சதீஷ்குமாரை 5 நபர்கள் வந்து சந்தித்து, செல்போனில் படம் பிடித்து வைத்திருந்த சிவப்பு பாதரசத்தை காண்பித்ததுடன், மற்றொரு செல்போனில் பணக்கட்டுகளை காண்பித்துள்ளனர்.
இதை நம்பாத சதீஷ்குமார் இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் இன்று காலை சதீஷ்குமாருடன் சாதாரண உடையில் போலீசார் சென்றபோது, வந்திருப்பது போலீசார் என்று தெரியாமல் அவர்களிடம் 5 பேரும் செல்போனில் சிவப்பு பாதரசத்தை காட்டி பேரம் பேசியுள்ளனர்.
இதையடுத்து பாண்டியராஜன், புருஷோத்தமன், கண்ணதாசன் உள்ளிட்ட ஐந்து பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த இவர்களில், கண்ணதாசன் கோத்தகிரியைச்சேர்ந்த சித்த மருத்துவர் என்றும், இவர் இது போல் பலரை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.