அடித்தனர் சிறுநீர் குடிக்க வைத்தனர் ? உ.பி பாஜக எம்எல்ஏ மீது காண்ஸ்டபிள் பரபரப்பு புகார்?
அடித்தனர்.. சிறுநீர் குடிக்க வைத்தனர்.. உ.பி. பாஜக எம்எல்ஏ மீது கான்ஸ்டபிள் பரபர புகார்.
டெல்லி: உத்தரபிரதேசத்தின் பர்கேரா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ, மற்றும் அடையாளம் தெரியாத 35 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை காலணிகளால் அடித்து, தங்கச் செயினை கொள்ளையடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கான்ஸ்டபிள் மோகித் குர்ஜார் சமீபத்தில் ரூ.50,000த்திற்கு ஒரு பைக் வாங்கியிருந்தார். ஆனால், பைக்கை விற்ற ராகுல் ஆவணங்களை கொடுக்கவில்லையாம். எனவே குர்ஜார் பெயரில் அந்த, பைக்கை மாற்ற முடியவில்லை. எனவே, தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி, ராகுலிடம் கேட்டுள்ளார். அப்போது ராகுலுடன் இருந்த மேலும் சிலருக்கும், குர்ஜாருக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அங்கு, கிஷான் லால் ராஜ்புட், மற்றும் அவர் உறவுக்காரர்களும், ஆதரவாளர்களும் வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு ராகுல் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து குர்ஜார் கூறுகையில், மோதல் கைகலப்பானது. அப்போது அவர்கள் என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நல்லவேளையாக தப்ப்ிவிட்டேன். எனது தங்க செயினையும், பர்சையும் பறித்துக் கொண்டு என்னை அடித்து உதைத்தனர். எனவே, நான் தப்பியோடி, அசாம் ரோடு காவல் நிலைய போஸ்டுக்கு சென்றேன். ஆனால், அங்கேயும், வந்து, என்னை அடித்து உதைத்தனர். ஷூவால் அடித்தனர். கிஷான் லால் ராஜ்புட் தனது ஆதரவாளர்களை விட்டு என்னை சிறுநீரை குடிக்க உத்தரவிட்டார்.
ஆனால், அங்கேயிருந்த போலீசார், இதையெல்லாம் வாயை மூடி பார்த்துக் கொண்டு இருந்தனர். இதன்பிறகு சன்காரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். நடவடிக்கைதான் எடுக்கப்படவில்லை. எனவே, நீதிமன்றத்தை அணுகினேன். நீதிமன்ற உத்தரவின்பேரில் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.