வன்முறையா பண்றீங்க துக்கடா குரூப்களுக்கு தக்கபாடம் கற்பிக்கப்படும் அமித்ஷா ஆவேசம்?
வன்முறையா பண்றீங்க.. துக்கடா குரூப்களுக்கு இருக்கு.. தக்க பாடம் கற்பிக்கப்படும்.. அமித் ஷா ஆவேசம்.
டெல்லி: டெல்லியில் உள்ள துக்கடா கேங்க்குகளுக்கு, தக்க பாடம் கற்பிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதிலும் தலைநகர் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, அங்கு பிற நகரங்களை விடவும் போராட்டம் உக்கிரமாக மாறியது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை சட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு தவறான கருத்துக்களை தெரிவித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் வன்முறையை தூண்டி வருகின்றன, இதுபோன்ற துக்கடா கேங்குகளுக்கு, உரிய பாடம் கற்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
வழக்கமாக வலது சாரிக் கட்சிகள், எதிர்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களை துக்கடாக்கள் என்று அழைப்பது வழக்கம்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு- கொல்கத்தாவில் மமதா பானர்ஜி 5-வது பேரணி
மேலும் அவர் பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி டெல்லி மக்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் டெல்லியின் அமைதியைக் காங்கிரஸ் குலைத்துள்ளது.
இந்த சட்டத் திருத்தம் பற்றி நாடாளுமன்றத்திற்குள் விவாதிக்கப்பட்டது. அங்கு யாரும் எதுவும் பேசத் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்தவுடன், குழப்பத்தை ஏற்படுத்தத் தொடங்கி, டெல்லியை கலவர பூமியாக மாற்றிவிட்டனர்.
பிரதம மந்திரி அவாஸ் யோஜனாவின் பலன்களை, ஏழை மக்களுக்கு, முதல்வர் கெஜ்ரிவால் வழங்கவில்லை. ஏனெனில் அந்த திட்டத்தில் பிரதமரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. இன்று மிகப்பெரிய தடையாக டெல்லி அரசு இருப்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். மோடி வேகமாக செயல்பட விரும்புகிறார், ஆனால் இந்த ஆம் ஆத்மி அரசு, அதற்கு ஒரு பெரிய தடையாக உள்ளது. ஒவ்வொரு அபிவிருத்திப் பணிகளிலும் கெஜ்ரிவால் அரசு தடையாக இருக்கிறது.
கெஜ்ரிவால் முதல்வராகி, சுமார் 60 மாதங்கள் ஆகிவிட்டன, வாக்குறுதிகள் அனைத்தையும் ஏன் நிறைவேற்றவில்லை. இனியும்கூட இந்த வாக்குறுதிகள் நிறைவேறப் போவதில்லை, விளம்பரத்தால் மட்டுமே அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் செய்யும் ஒரே வேலை எதிர்ப்பு மற்றும் மறியல் ஆகியவைதான். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.