திருமணமான கல்லூரி மாணவி பானு ரேகா எரித்து கொலை? வெறிபிடித்த கணவர் கைது?விருதுநகரில் பரபரப்பு?
✍? 20 வயது கல்லூரி மாணவி கொலை… ஊர் ஊராக அழைத்துச் சென்று எரித்து கொன்ற கணவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இரு தினங்களுக்கு முன்பு எரித்து கொலை செய்யப்பட்ட பெண், விருதுநகரைச்சேர்ந்தவர் என்றும், நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே மனைவியை ஏமாற்றி அழைத்து வந்து எரித்துக் கொன்றதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கடந்த திங்கட்கிழமை இரவு 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மறுநாள் விருதுநகர் பாண்டி நகர் காவல் நிலையம் சென்ற ஒருவர், திருமணமான தனது மகள் பானுரேகா கல்லூரியில் படித்து வந்ததாகவும், அவரை காணவில்லை என்றும் புகார் அளித்தார்.
இதையடுத்து கணவர் ராஜ்குமாரை அழைத்து விசாரணை நடத்தியதில், அவர் நடத்தையில் சந்தேகப்பட்டு, கல்லூரியில் இருந்த பானுரேகாவை கோவிலுக்கு செல்லலாம் என்று அழைத்துச்சென்று விராலிமலை அருகே கழுத்தை நெரித்து கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ந்த விருதுநகர் போலீசார் இதுபற்றி விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, ராஜ்குமாரை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது பானுரேகா சடலம் எரிக்கப்பட்ட இடத்தை போலீசாரிடம் அடையாளம் காட்டியுள்ளான். இதையடுத்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகரைச்சேர்ந்த ராஜ்குமார் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். அவருக்கும் உறவினரான கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த 20 வயது மாணவியான பானுரேகாவுக்கும் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. படிப்பு முடிந்ததும் பல்லடம் அழைத்து செல்லலாம் என்றிருந்த நிலையில், மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக ராஜ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பல்லடத்தில் இருந்து விருதுநகர் வந்த ராஜ்குமார், கல்லூரி சென்றிருந்த பானுரேகாவை கோவில்களுக்கு செல்லலாம் என்று வரவழைத்துள்ளார். இருசக்கர வாகனத்திலேயே இருவரும் திருச்சி, ஸ்ரீரங்கம், சமயபுரம், கோவில்களுக்கு சென்றுவிட்டு, விராலிமலை சென்றதாகவும், அங்கு பானுரேகாவை கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்ரோலை ஊற்றி எரித்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு இரு சக்கர வாகனத்திலேயே கரூர் சென்று நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்து மூலம் விருதுநகர் சென்று எதுவும் தெரியாதவர் போல் நடந்து கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே பானுரேகா சடலத்தை அடையாளம் தெரியாதவர் என்று கூறி போலீசார் அடக்கம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மகள் சடலத்தைக்கூட பார்க்க முடியவில்லை என தந்தை அழகர் வேதனை தெரிவித்தார்.