பணம் பதுக்கு பவர்களின் விருப்பமாக மாறியிருக்கும் 2000 ரூபாய் நோட்டு?
பணம் பதுக்குபவர்களின் விருப்பமாக மாறியிருக்கும் 2000 ரூபாய் நோட்டு!
பணத்தை பதுக்குபவர்களுக்கு விருப்பமான பணமதிப்பாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டு மாறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி, அதுவரை புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். மதிப்பிழப்பு செய்யப்பட்ட 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 2000 ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது. 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டு 3 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் பணத்தை ரொக்கமாக பதுக்குபவர்களின் விருப்பமான பணமாக 2000 ரூபாய் நோட்டு உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது குறித்த கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த நிதியாண்டில் பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத பணத்தில் 43.22 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் தான் என்று தெரிவித்துள்ளார்.
2018 மற்றும் 2019ம் ஆண்டு நிதியாண்டில் கணக்கில் வராத 2000 ரூபாய் நோட்டுகள் 60%க்கும் மேல் இருந்தது. தற்போதைய நிதியாண்டில் இந்த அளவு குறைந்திருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆண்டுக்குப் பிறகான முழு நிதியாண்டில், கணக்கில் வராத 67.91 சதவீத பணம் 2000 ரூபாய் நோட்டாகதான் இருந்தது என்றும், 2019ம் நிதியாண்டில் சற்று குறைந்து 65.93 சதவீதம் பதுக்கல் பணம் 2000 ரூபாய் நோட்டாகதான் இருந்தது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபின், வருமானவரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டு பதுக்கல் சதவீதம், அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைந்திருக்கிறது. இது, 2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது பணபதுக்கலை எளிமையாக்குவதற்கு தானோ என்று அச்சம் எழுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட இந்த தகவலானது , கடந்த 3 நிதியாண்டுகளில் வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தொகையை மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிக்கு வழங்கப்படும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக சட்டப்பிரிவு 13A ன் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இந்த விதிகளின் படி 2000 ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்குபவர்கள் அதை செக், ட்ராஃப்ட் அல்லது இணைய பறிமாற்றம் மூலமாகதான் செய்யவேண்டும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், 2000 ரூபாய் பணத்தை பதுக்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த எந்த திட்டத்தையும் நிதியமைச்சர் வெளியிடவில்லை. இருப்பினும், 2000 ரூபாய் நோட்டு பதுக்குவதை தடுக்க அரசு நிச்சயம் ஏதாவது நடவடிக்கையை எடுத்தே ஆகவேண்டும் என்று நிதித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, எந்த இடையூறுகளும் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்ய வேண்டும் என்று முன்னாள் நிதித்துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்திருந்தார். மேலும், 2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கப்பட ஆரம்பித்தபின் இந்த நோட்டுகளின் புழக்கம் வெகுவாக குறைந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
மார்ச் 31 2019ம் ஆண்டின் தகவல்படி, 6.582 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 329.1 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.