இந்துமதத்தை இழிவுபடுத்தி பேசுவதை அரசியல் தலைவர்கள் குறைத்துக் கொள்ளவேண்டும் – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுவதை அரசியல் தலைவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
இந்துக்கோயில்கள் பற்றி திருமாவளவன் கருத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுவதை அரசியல் தலைவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சிவகாசியில் 66வது கூட்டுறவு விழாவில் 11 கோடி மதிப்பில் கடன் உதவி வழங்கப்பட்ட பின்னர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என்ற மு.க. அழகிரியின் கருத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று கூறினார். இந்துக்கோயில்கள் பற்றி திருமாவளவன் கூறிய கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கோயில் கோபுரங்களில் உள்ள சிலைகள் மனிதர்களின் வாழ்வை குறிப்பதாகக் கூறினார். அவை வெறும் பொம்மைகள் அல்ல, கலாச்சாரத்தை பிரதிபலிப்பவை என்றும் தெரவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், கூம்பாக இருந்தால் அது மசூதி, உயரமாக இருந்தால் அது தேவாலயம், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயில் என்று தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சிதம்பரம் கோயிலுக்கு திருமாவளவன் சென்ற புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து பாஜக துணை செயலாளர் நாராயணன் திருப்பதி மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள தொல்.திருமாவளவன், தனது முழுமையான உரையில் 10 நொடிகள் மட்டுமே வரும் பேச்சை முன்னிறுத்தி தன்னை மக்களுக்கு எதிராக திசை திருப்ப பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.