வெகுண்டெழுந்த காங்கிரஸ் தொண்டர்கள்.. டெல்லியில் அமித் ஷா வீடு முற்றுகை.. இந்த அறிவிப்புதான் காரணம்.
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்புக் குழு (எஸ்பிஜி) பாதுகாப்பை மத்திய அரசு இன்று திரும்பப் பெற்றுள்ளது. தற்போது அவர்களுக்கு சிஆர்பிஎஃப் மூலம் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1988 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட எஸ்பிஜி சட்டம் ஆரம்பத்தில் பிரதமர் மற்றும் நாட்டின் முன்னாள் பிரதமர்களுக்கு மட்டுமே பாதுகாப்பை வழங்கியது. ஆனால் பின்னர், சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு ராஜிவ்காந்தி, சோனியா காந்தி மற்றும் அவர் குடும்பத்தார் இந்த பாதுகாப்பு பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
இப்போது விரிவான ஆய்வுக்கு பிறகு இந்த சிறப்பு பாதுகாப்பை விலக்குவதாக அரசு கூறியுள்ளது. எனவே, பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே உயரடுக்கு எஸ்பிஜி கமாண்டோக்களால் பாதுகாக்கப்படும் ஒரே நபராக இருப்பார்.
கடந்த ஆகஸ்டில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் எஸ்பிஜி பாதுகாப்பை அரசு திரும்ப பெற்ற நிலையில், அடுத்ததாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த நடவடிக்கையை கண்டித்து, டெல்லியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வீட்டை காங்கிரசை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முற்றுகையிட்டனர். இதனால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு அவர்கள் வேன்களில் ஏற்றி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் கூறுகையில், நாட்டின் முன்னாள் பிரதமர்கள், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர் எனவேதான், காந்தி குடும்பத்திற்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பை வாஜ்பாய் ஆட்சி காலத்தில் வழங்கினார். அதை தற்போது, மோடி & ஷா கூட்டணி கைவிடுவது தவறானது, என்றார்.