மும்பை குண்டுவெடிப்பு சம்பவ காயங்களும் வடுக்களும் இன்னும் ஆறவில்லையென பிரதமர் மோடிபரபரப்பாக பேசினார்
1993ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பின் காயங்களும் வடுக்களும் ஆறவில்லை என்றும், அதனை ஒருபோதும் மறக்க மாட்டோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ர சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.அப்போது 1993 தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அவர் நினைவு கூர்ந்தார். இந்த குண்டுவெடிப்பின் காயங்களை நம்மால் மறக்க முடியாது என்று கூறிய மோடி, குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முந்தைய அரசுகள் நீதி வழங்கவில்லை என்று கூறிய பிரதமர், எதிரிகளை பிடித்து சிறையில் அடைக்காமல் அவர்களுடன் மிர்ச்சி வியாபாரம் செய்து வருவதாக எதிர்க்கட்சியினரை சாடினார்.தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு மும்பை இலக்கானதாக தெரிவித்த மோடி, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.\r\n\r\nதுல்லியத் தாக்குதல், பாலகோட் வான் தாக்குதல் போன்றவை வெறும் சொற்கள் அல்ல என்றும் அவை பாஜகவின் அரசியல் கொள்கைக்கான அடையாளங்கள் என்றும் மோடி தெரிவித்தார்.மேலும் சட்டப்பிரிவு 370, 35 ஏ போன்றவற்றை பல ஆண்டுகளாக நீக்காமல் வைத்திருந்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், தீவிரவாதமும் ஊழலும் வேரூன்றி வளர இடம் கொடுத்ததாக பிரதமர் விமர்சித்தார்.வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து சட்டப்பிரிவு 370 ஐ நீக்கிய போதும் எதிர்க்கட்சியினர் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பேசாமல் எதிரிகளின் குரலில் பேசி வருகின்றன என்றும் சாடினார்.