ப.சிதம்பரத்தை மாட்டிவிட்ட இந்திராணி முகர்ஜி மன்னிப்பு கொடுத்தது சிபிஐ
விண்மீன் விரைவு செய்திகள்.
ப.சிதம்பரத்தை மாட்டி விட்ட இந்திராணி முகர்ஜி.. மன்னிப்பு கொடுத்தது சிபிஐ!
டெல்லி: ப.சிதம்பரத்தை சிறையில் தள்ள முக்கியக் காரணமான இந்திராணி முகர்ஜியை, அப்ரூவராக அங்கீகரித்து அவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளதாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் இந்திராணி உள்பட 15 பேரிடம் விசாரணை நடத்தப்படாது என்றும் சிபிஐ தெரிவித்துளளது. நேற்று இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்திராணி அப்ரூவராக மாறி விட்டதாகவும், அவர் மன்னிக்கப்பட்டு விட்டதாகவும், அவரிடம் விசாரணை நடத்தப்படாது என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் வழக்கில் இந்திராணி அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்திருந்தார். அதை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து இந்திராணி இந்த வழக்கில் சிபிஐக்கு உதவ வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டிருந்தது..
தனது கணவர் பீட்டர் முகர்ஜியாவுடன், இந்திராணி முகர்ஜி ஏற்படுத்திய நிறுவனம்தான் இந்த ஐஎன்எக்ஸ் மீடியா. கடந்த 2008ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்தியில் அமைச்சராக இருந்தபோது அவருக்கு லஞ்சம் கொடுத்து, வெளிநாட்டு முதலீடுகளை சட்டவிரோதமாக அவர் பெற்றார் என்பது குற்றச்சாட்டு.
இந்திராணி முகர்ஜி தற்போது மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது சொந்த மகள் ஷீனா போராவை கொடூரமாக கொலை செய்த வழக்கில் சிக்கி கைதானவர் அவர்.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது அதற்காக மகிழ்ச்சி தெரிவித்து நல்ல செய்தி என்று இந்திராணி முகர்ஜி கருத்து தெரிவித்திரு்நதார் என்பது நினைவிருக்கலாம். இந்திராணியை தற்போது அவரது கணவர் பீட்டர் முகர்ஜியா விவாகரத்து செய்து விட்டது நினைவிருக்கலாம்.