கோவில்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள எல்.ஜி. செல்வ மஹால் திருமண மண்டபத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாரநாதா வேதாகம சபை போதகர் பால் பி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சென்னை பாவைமதி பதிப்பகம் மற்றும் பாவையர்மலர் மாத இதழ் ஆசிரியர் ம.வான்மதி முன்னிலை வகித்தார்.பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரி கரு.துரைராஜ், யு.பி. மெட்ரிக் பள்ளி ஆசிரியர் ஜெ.பார்த்திபன் எழுதிய காட்சிப் பிழைகள் என்ற நூலை வெளியிட, அதன் முதல் பிரதியை கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் கா.தெய்வேந்திரன் பெற்றுக் கொண்டார்.
நாடார் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியர் ஜான்கணேஷ், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் கோ.சந்தனமாரியம்மாள் ஆகியோர் நூல் திறனாய்வு குறித்துப் பேசினர்.
அதைத் தொடர்ந்து, பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை தலைவர் பரமசிவம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நூலாசிரியர் பார்த்திபனை பாராட்டி பேசினார்.
நிகழ்ச்சியில், யு.பி. மெட்ரிக் பள்ளி செயலர் ராஜு, பள்ளி முதல்வர் சந்தோஷ், நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாதெமி தலைவர் தங்கமாரியப்பன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். நூலாசிரியர் ஜெ.பார்த்திபன் ஏற்புரை நிகழ்த்தினார். பொன் விஸ்வநாதன் வரவேற்றார். கடையநல்லூர் ருக்மணி கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார்.