கோவில்பட்டியில்அரசு அலுவலக வளாக சாலை சீரமைக்காததை கண்டித்துகோவில்பட்டியில் தமாகா கட்சியினர் காத்திருப்பு போராட்டம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பாய் விரித்து அமர்ந்து காத்திருப்பு போராட்டம்
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் அரசு அலுவலக வளாக சாலை சீரமைக்காததை கண்டித்து தமாகாவினர் நேற்று தமாகாவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டியில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் வேலை நாட்களில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் முதல் அரசின் கடைநிலை ஊழியர்கள் வரையிலும், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் என தினமும் சுமார் 5 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இங்குள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தமாகா சார்பில் மனுக்கள் அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்தவித தீர்வும் காணப்படவில்லை. இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு மட்டும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு அலுவலக வளாகத்தில் உள்ள சாலை சீரமைக்கப்படவில்லை.
அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் சாலை கூட சீரமைக்கப்படாததை கண்டித்தும், ஒன்றரை ஆண்டுகளாக வழங்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத கண்டித்தும் நேற்று தமாகாவினர் வடக்கு மாவட்ட தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பாய் விரித்து அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு அலுவலக வளாக சாலை சீரமைக்கப்படாததை கண்டித்தும், ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும் கோஷமிட்டனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோட்டாட்சியர் பங்கேற்றுள்ளார். அதனால் கோரிக்கை தொடர்பான மனு அளித்துவிட்டு கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். நாங்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி விட்டோம். ஏராளமான மனுக்களும் அளித்து விட்டோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதனால் எங்களுக்கு உரிய தீர்வு வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தமாகாவினர் தெரிவித்தனர்.
போராட்டத்தில், நகர பொருளாளர் ஜி.செண்பகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.திருமுருகன், நகர செயலாளர் வி.எஸ்.சுப்புராஜ், நகர துணை தலைவர் வி.மணிமாறன், வட்டார துணை தலைவர் கே.செந்தூர்பாண்டியன் மற்றும் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, வட்டாட்சியர் சரவணபெருமாள், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினி உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அரசு அலுவலக வளாக சாலை சீரமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநரிடம் பேசப்பட்டது. இந்த சாலை புதிதாக அமைத்திட திட்ட செலவீடு தயார் செய்து மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். எனவே, சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து காலை 11 மணி முதல் போராட்டம் நடத்திய அவர்கள் பிற்பகல் 2 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.