திருநெல்வேலி ஜங்சனில் குடிபோதையில் தகராறு செய்து ரெயில்வே கேட் கீப்பரை தாக்கிய ரவுடி உள்பட 2 வாலிபர்கள் கைது
நெல்லை:நெல்லையில் இருந்து கடையம் செல்லும் சாலையில் மேலக்கல்லூரில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது.இந்த ரெயில்வேகேட் கீப்பராக நெல்லை சுத்தமல்லியை அடுத்த பழவூர் மேலத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 39) வேலைபார்த்து வருகிறார்.இவர் நேற்று மாலை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நெல்லையில் இருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக ரெயில்வே கேட்டை அடைத்துள்ளார்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் ரெயில் வருவதற்கு நேரம் நிறைய இருக்கிறது.அதற்கு முன்பே ஏன் கேட்டை அடைத்து விட்டீர்கள் என கூறி சுப்பிரமணியனிடம் குடிபோதையில் தகராறு செய்துள்ளனர்.அந்த வாலிபர்களிடம் சுப்பிரமணியன் ரெயில் வரும் நேரம் ஆகிவிட்டது. எனவே தான் கேட்டை அடைத்தேன் என கூறி உள்ளார்.இதனால் ஆவேசமடைந்த 2 வாலிபர்களும் அங்கு கட்டிட பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு சட்டியை எடுத்து சுப்பிரமணியனை தாக்கி உள்ளனர். மேலும் அவரை கொன்று விடுவதாக மிரட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியாமோகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.வீடியோ ஆதாரம் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் சுப்பிரமணியனை தாக்கியது முக்கூடல் அருகே அரிகே சவநல்லூர் கீழத்தெருவை சேர்ந்த பத்ரகாந்த் (23), முக்கூடல் அருகே உள்ள தென்திரு புவனத்தை சேர்ந்த ஆறுமுக குமார் (34) என்பது தெரியவந்தது.மேலும் பத்ரகாந்த் மீது ஏற்கனவே வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் சில வழக்குகள் இருப்பதும், அவரது பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்வதற்காக இன்ஸ்பெக்டர் பிரியா மோகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், தனிப் பிரிவு இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி பத்ரகாந்த், ஆறுமுகக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.