தமிழக பாஜகவிடம் 15 தொகுதிகள் கேட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்?பாஜக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தகவல்?ஓபிஎஸ் அணிக்கு தேனி, வட சென்னை தொகுதி அல்லது கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கும் தமிழக பாஜக? உண்மை நிலை என்ன?
தமிழக பாஜக கூட்டணியில் இணைந்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 15 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான விருப்பப் பட்டியலைக் கொடுத்துள்ள நிலையில், பாஜக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், 15 தொகுதிகளைப் பாஜகவிடம் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், நாகை, தஞ்சாவூர், ஆரணி, திருச்சி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், மதுரை, கோவை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜகவிடம் ஓபிஎஸ் அணியினர் கொடுத்துள்ளதாகத் தகவல்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடரும். பாஜக பொறுப்பாளர்கள் மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி தொகுதிகள் குறித்த முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர்,” என்றார்.
அதே நேரத்தில் ஓபிஎஸ் அணிக்கு 15 தொகுதிகள் என்பது அதிகம் என்றும் அது நிறைவேறாத ஆசை என்றும் அதிகபட்சமாக அவருக்கு இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் தான் கிடைக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஓபிஎஸ் அணிக்கு தேனி, வட சென்னை தொகுதி ஒதுக்கப்படும் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. தனக்கு கிடைக்கும் இரண்டு தொகுதிகளில் அவர் தனது இரண்டு மகன்களையும் போட்டியிட வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.