தேமுதிக தலைவரும் நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் சகோதரர் சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி பெற்று ஏமாற்றியதாகப் புகார்: கட்டுமான நிறுவன அதிபர் சந்தோஷ் சர்மா கைது?
சென்னை: பிரேமலதா விஜயகாந்தின் சகோதரரும் தேமுதிக துணைப் பொதுச் செயலாளருமான சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி பணத்தைப் பெற்று மோசடி செய்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சந்தோஷ் சர்மா, வீடு கட்டித் தருவதாகக் கூறி இந்தத் தொகையை பெற்று ஏமாற்றியதாகத் தெரிகிறது.
லோகோ பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் இவர், சென்னையின் புறநகர்ப் பகுதியான மாதவரத்தில் 250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டி வருகிறார்.
இவற்றுள் 78 வீடுகளை வாங்கிக் கொள்வதாக சந்தோஷ் சர்மாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார் சுதிஷின் மனைவி. இது தொடர்பாக பல கோடி ரூபாய் கைமாறியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்தோஷ் சர்மா இந்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் தனக்காக ஒதுக்கப்பட்ட 48 வீடுகளை வேறு ஒருவருக்கு விற்று ரூ.43 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டதாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் சுதிஷின் மனைவி.
இதன் பேரில் சந்தோஷ் சர்மாவையும் அவரது உதவியாளர் சாகர் என்பவரையும் காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.