‘அம்மஞ்சல்லி’: அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் பயன்படுத்திய வார்த்தை; அர்த்தம் தெரியாமல் ஆழ்ந்து யோசித்த பேரவை உறுப்பினர்கள்
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் பேசியபோது குறிப்பிட்ட ‘அம்மஞ்சல்லி’ என்ற வார்த்தை அங்கிருந்த உறுப்பினர்களை யோசிக்க வைத்தது.
வியாழக்கிழமையன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றியபோது, தமிழகம் எதிர்கொண்ட புயல், வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மீண்டு வர மத்திய அரசு ‘அம்மஞ்சல்லி’ கூட தரவில்லை எனக் குறிப்பிட்டார்.
ஒருவர் கூறுவதில் நமக்கு உடன்பாடு இல்லை என்றால் ‘சல்லிக் காசு’க்கு பயனில்லை’ என்று சொல்வோம்.
‘சல்லி’ என்றால் நாணயம், காசு எனப் பொருள் கொள்ளலாம். காளைகளின் கொம்பில் ‘சல்லி’ எனப்படும் நாணயங்களை கட்டிவிட்டு நடத்தப்படும் வீர விளையாட்டு சல்லிக்கட்டு. அது பின்னர் மருவி ஜல்லிக்கட்டு என்று ஆனது.
அதேபோல், அம்மஞ்சல்லி என்பதை ‘அம்மணம் சல்லி’ என பிரித்துப் பார்த்தால், அம்மணமான காசு என்று அர்த்தமாகிறது.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு புதுக்கோட்டையும் அதைச் சுற்றியிருந்த சில பகுதிகளும் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டன.
அப்போது அங்கு ஆட்சிபுரிந்த தொண்டைமான் மன்னர்கள் புதுக்கோட்டைக்கென தனி நாணயம் வெளியிட்டனர். அந்த நாணயம் அம்மணமான காசு என்று அழைக்கப்பட்டது. மேலும் பல விதமான பொருள் கொண்டு கூறப்படுகிறது. ஆனால் மொத்தத்தில் சல்லி காசுக்கு புரோஜம் இல்லடா? என்பது அம்மஜல்லி வார்த்தைக்கு பொருளாகும். மதுரை சுற்றுவட்டாரங்களில் இந்த வார்த்தையை பெரும்பாலான மக்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.
பின்னாள்களில் புதுக்கோட்டை அம்மஞ்சல்லி என்ற வார்த்தை மருவி, வெறும் அம்மஞ்சல்லி என்று மாறி உள்ளது,” என்கிறார்கள் ஆய்வாளர்கள்.