கண்காணிப்பு கேமரா பொருத்தாவிட்டால் கிளப், டாஸ்மாக் மதுக்கூட உரிமம் ரத்து
சென்னை : ‘சட்டவிரோத மது விற்பனையை தடுக்க, கிளப்கள் மற்றும் மதுக்கூடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்; இல்லாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்’ என, டாஸ்மாக் எச்சரித்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,820 மதுக்கடைகளை நடத்துகிறது. அதில், 2,500க்கும் மேற்பட்ட கடைகளில் மதுக்கூடங்கள் நடத்த தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, அரசிடம் அனுமதி பெற்ற, ‘கிளப்’கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களிலும் மது விற்பனை நடக்கிறது.
டாஸ்மாக் கடைகள் இரவு, 10:00 மணிக்கு மேல் மூடப்பட்டாலும், அதை ஒட்டிய மதுக்கூடங்களில் விடிய, விடிய மது வகைகள் முறைகேடாக விற்கப்படுகின்றன. கிளப்களில் உறுப்பினர்களை தவிர்த்து, வெளிநபர்களுக்கும் மது விற்கப்படுவதுடன், டாஸ்மாக் நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படாத மது வகைகளும் விற்கப்படுகின்றன.
இன்னும் சில வாரங்களில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. எனவே, சட்ட விரோத மது விற்பனையை தடுக்க, கிளப்கள், நட்சத்திர ஹோட்டல்களில் மது விற்கும் இடம் மற்றும் டாஸ்மாக் மதுக்கூடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு, டாஸ்மாக் நிறுவனத்திற்கு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கு ஏற்ப, அனைத்து மதுக்கூடங்களிலும் கேமராக்களை பொருத்துமாறு, அதை நடத்த உரிமம் வழங்கியவர்களுக்கு, டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது. இதை பின்பற்றாமல் அலட்சியம் காட்டினால், மதுக்கூட உரிமம் ரத்து செய்யப்பட்டு, அதற்காக செலுத்திய தொகை பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.