பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தடுப்பணை கண்டறிவு?1,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வேளாண்மை, பாசன தொழில்நுட்பங்கள்?
திண்டுக்கல்: பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தடுப்பணை கண்டறியப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்தித் தருவதில் இந்தத் தடுப்பணை முக்கிய பங்கு வகித்திருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பழனி அருகே உள்ள பொருத்தல் என்ற பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி தலைமையில் அண்மையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த தடுப்பணை கண்டறியப்பட்டது.
“இப்பகுதியில் உள்ள சுருளி ஆறு, சண்முக நதியின் கிளை ஆறாகும். இதைச் சுள்ளி ஆறு என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த ஆற்றின் போக்கை மாற்றும் வகையில் தடுப்பணை கட்டியுள்ளனர்.
“அணையின் சிதைந்து போன இடிபாடுகளை ஆராய்ந்தபோது இந்த விவரங்களை அறிய முடிந்தது. இந்தத் தடுப்பணையின் மூலம் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விளைநிலங்கள் பாசன வசதியைப் பெற்று இருக்க வேண்டும்.
“ஆற்றின் அருகே மூன்று குளங்கள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது இந்தக் குளங்களை நிரப்பிய பிறகே மழைநீரானது சண்முகநதியில் கலக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“இந்தத் தடுப்பணையின் மூலம் இப்பகுதியில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வேளாண்மை, பாசன தொழில்நுட்பங்கள் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது,” என ஆய்வாளர் நாராயணமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.