கோவில்பட்டி நாலாடின்புத்தூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி,2மாடுகள் பலி
கோவில்பட்டி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி, 2 மாடுகள் பலி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மின்சாரம் தாக்கி மாடு மேய்க்கும் தொழிலாளி மற்றும் 2 பசுமாடுகள் உயிரிழந்தன.
கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் சின்னத்துரை(44). மாடு மேய்க்கும் தொழிலாளி. இவர் தனது வீட்டின் ஒருபுறம் மாட்டுத் தொழுவம் நடத்தி வந்தார். இந்நிலையில், வழக்கம்போல புதன்கிழமை மாட்டுத் தொழுவத்தில் 2 பசுமாடுகளை விட்டுவிட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த இவர், தொழுவத்தில் பார்த்தபோது 2 மாடுகளும் கீழே விழுந்த நிலையில் கிடந்ததைக் கண்ட அவர், அதை தொட்டுப் பார்த்த போது அவரும் கீழே விழுந்தாராம்.
அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது மின்சாரம் தாக்கி 2 மாடுகள் மற்றும் சின்னத்துரை இறந்தது தெரியவந்தது. அதையடுத்து, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற நாலாட்டின்புத்தூர் போலீஸார் சின்னத்துரை சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சின்னத்துரைக்கு முத்தலட்சுமி(38) என்ற மனைவியும், மதுமிதா(17), கருப்பசாமி(7), கமலேஷ்(5) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். இறந்த மாடுகள் வில்லிசேரி கால்நடை மருந்தகத்திற்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.