கோயம்புத்தூர் ஸ்டைல் சிக்கன் பிரியாணி எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
நீங்கள் பிரியாணி பிரியரா? அடிக்கடி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிடுவீர்களா? இல்லாவிட்டால் வீட்டிலேயே பிரியாணி செய்வீர்களா? ஆனால் எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் பிரியாணி செய்வீர்களா? நீங்கள் செய்யும் பிரியாணி தக்காளி சாதம் போன்று இருக்குமா? அப்படியானால் அடுத்தமுறை பிரியாணி செய்வதாக இருந்தால், கோயம்புத்தூர் ஸ்டைல் சிக்கன் பிரியாணியை செய்யுங்கள். இந்த சிக்கன் பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இதை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். அந்த அளவில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு கோயம்புத்தூர் ஸ்டைல் சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோயம்புத்தூர் ஸ்டைல் சிக்கன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் – 250 கிராம்
* பாசுமதி அரிசி – 4 கப்
* தண்ணீர் – 7-8 கப்
* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
* நாட்டு தக்காளி – 2 (நறுக்கியது)
* கொத்தமல்லி – ஒரு கையளவு
* புதினா – ஒரு கையளவு
* கரம் மசாலா – 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
* நெய் – 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
பிரியாணி மசாலாக்கள்…
* பிரியாணி இலை – 2
* ஏலக்காய் – 1
* ஜாதிபத்ரி – சிறிது
* கல்பாசி – 2
* உலர்ந்த ரோஜாப் பூ இதழ் – 4
அரைப்பதற்கு…
* இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு – 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் – 2
* வரமிளகாய் – 2
* பட்டை – 1/2 இன்ச்
* கிராம்பு – 2
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வரமிளகாய், பட்டை, கிராம்பு, சோம்பு, மல்லித் தூள் சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பின் பாசுமதி அரிசியை நீரில் 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, ஏலக்காய், ஜாதிபத்ரி, கல்பாசி, காய்ந்த ரோஜாப்பூ இதழ்களை சேர்த்து தாளிக்க வேண்டும். * அடுத்து வெங்காயத்தைப் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். அதன் பின் அரைத்த மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும். * பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும். * அடுத்து கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் வதக்க வேண்டும். * அதன்பின் கரம் மசாலா, மிளகுத் தூள், கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு வதக்க வேண்டும். * பின்பு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, கொதிக்க வைக்க வேண்டும். * நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும். * விசில் போனதும் குக்கரைத் திறந்து, நன்கு கிளறி விட்டால், சுவையான கோவை ஸ்டைல் சிக்கன் பிரியாணி தயார்.