அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள், பல்வேறு கட்ட சிகிச்சைகள் செய்து 34 நாட்களுக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்த நிலையில் பல்வேறு கட்ட சிகிச்சைகள் செய்து 34 நாட்களுக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல் சீலப்பாடி செல்லமந்தாடியை சேர்ந்த தனியார் ஊழியர் சசிராஜ், இவரது மனைவி ரிஷா. இவர்களுக்கு 2021ல் திருமணம் முடிந்த நிலையில் ரிஷா, 2022ல் முதல் முறையாக கர்ப்பமானார்; அக்கரு கலைந்தது. இதையடுத்து மீண்டும் ரிஷா 2023ல் கர்ப்பமடைந்தார். அக்.,20ல் பிரசவத்திற்காக ரிஷா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்.,21ல் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் 2 ஆண், 1,பெண் குழுந்தை என ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன.
குழந்தைகளின் உடல் நலம் கருதி திண்டுக்கல் அரசு மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளர் வீரமணி, குழந்தைகள் நலப்பிரிவு தலைமை டாக்டர் திருநாவுக்கரசு, பச்சிளம் குழந்தை பிரிவு டாக்டர் ராகவேந்திரன் உள்ளிட்டோர் 3 குழந்தைகளையும் சிசு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து வெண்டிலேட்டர், செயற்கை சுவாசம் உள்ளிட்ட சிகிச்சைகளை வழங்கினர். அதன்பின் குழந்தைகளை கங்காரு பராமரிப்பு வார்டில் வைத்து டியூப் மூலம் தாய்ப்பால் வழங்கப்பட்டு பராமரித்தனர்.
தொடர்ந்து கண்விழித்திரை, செவித்திறன் பரிசோதிக்கப்பட்டு நல்ல முறையில் 3 குழந்தைகளும் பராமரிக்கப்பட்டனர். நலமாக வளர்ந்த குழந்தைகளை 34 நாட்களுக்கு பின் திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். குழந்தைகளை பெற்றுகொண்ட சசிராஜ், ரிஷா தம்பதியினர் அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.