கனடாவைத் தொடர்ந்து அமெரிக்கா; `சீக்கியரைக் கொல்லச் சதி’- அமெரிக்காவின் தகவலும், இந்தியாவின் பதிலும்!
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, மோதல்போக்கு நீடிக்கிறது.
இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்திருக்கின்றன. இந்தியாவிலிருக்கும் 40-க்கும் மேற்பட்ட கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். தங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையாக இருக்க விரும்புவதாகக் கூறும் கனடா பிரதமர், ஹர்தீப் சிங் கொலை விவகாரத்தில், இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்திவருகிறார்.
இந்தியா- கனடா
`கனட குடிமகன் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், இந்திய அரசின் ஏஜென்ட்டுகள் ஈடுபட்டிருக்கிறார்கள்!’ என்ற கனடாவின் குற்றச்சாட்டு, இந்தியா – கனடாவுக்கிடையே பெரும் உறவுச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தற்போது அமெரிக்காவும், இந்தியாவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. அமெரிக்காவில், காலிஸ்தான் ஆதரவுத் தலைவரும், அமெரிக்கா-கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்றவருமான குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவரைக் கொலைசெய்ய சதித்திட்டம் நடைபெற்றதாகவும், அதை அமெரிக்கா முறியடித்ததாகவும் கூறுகிறது.இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `அமெரிக்க மண்ணில் சீக்கிய காலிஸ்தான் ஆதரவாளரைக் கொல்வதற்காக நடந்த சதித்திட்டத்தை அமெரிக்கா மிகுந்த தீவிரத்துடன் எதிர்கொண்டிருக்கிறது. இது குறித்து இந்திய அரசிடம் உயர்மட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறோம். அமெரிக்க மண்ணில் நடந்த சீக்கியர்மீதான கொலை முயற்சி ஆச்சர்யத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. ஆனால், இது போன்று செயல்படுவது இந்தியர்களின் கொள்கையல்ல.
குர்பத்வந்த் சிங்
இந்திய அரசும் இந்தப் பிரச்னையை விசாரித்து வருகிறது என்பதை புரிந்துகொள்கிறோம். மேலும், வரும் நாள்களில் இதைப் பற்றி மேலதிக தகவல்களைத் தெரிவிப்போம். இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பாக, இந்தியா இந்த விவகாரத்தைக் கையாளும் என்ற எதிர்பார்ப்பைத் தெரிவித்திருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “அமெரிக்க மண்ணில் காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைப் படுகொலைசெய்யும் திட்டத்தை, அமெரிக்கா முறியடித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.பயங்கரவாதிகளுக்கு மற்றவர்களுடனான தொடர்பு குறித்து அமெரிக்கா வெளியிட்டிருக்கும் தகவல்கள் குறித்து, விசாரித்து வருகிறோம். இந்த விவகாரம் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு நலன்களிலும் பாதிப்பை ஏற்படுத்துவதால், இது போன்ற செய்திகளை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. எனவே, இது போன்ற சிக்கல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கெனவேஆய்வு பணிகள்நடந்து வருகின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.