சென்னை: சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கபிலா. இவர் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் திடீரென தனது அந்தரங்க உறுப்பைக் காண்பித்து ஆபாசமாக நடந்துகொண்டுள்ளார்.
இதனைச் சற்றும் எதிர்பாராத அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து தமது கைப்பேசியில் அவரது செயலை காணொளி எடுத்து, அவரிடம் சண்டையிட்டார். சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதே அந்த நபர் ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளார்.
மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியதும் ரயில்வே காவலர்களிடம் தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறி புகார் அளித்ததோடு அந்த காணொளிகளையும் சமர்ப்பித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய ரயில்வே காவல்துறையினர் சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் காணொளிகளைச் சரிபார்த்தனர்.
பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு காவலராக பணிபுரிந்து வரும் கருணாகரன் என்பது அப்போது உறுதி ஆனது.
கருணாகரன் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.