புதியதமிழகம் கட்சி கொந்தளிப்பு அதிமுக அதிர்ச்சி
விண்மீன்நியூஸ் விரைவு செய்திகள்.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா புதிய தமிழகம்?
சென்னை: அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எந்த உறுதியும் அளிக்காததால் முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம்.
அதிமுக கூட்டணியில் உள்ள டாக்டர் கிருஷ்ணசாமி, அண்மைக்காலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். 7 பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடக்கோரி தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.
ஆனால், கிருஷ்ணசாமியின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், அதிமுக-புதிய தமிழகம் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில் புதிய தமிழகத்தின் ஆதரவு இருந்தால் டென்ஷன் குறையும் என உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து கிருஷ்ணசாமியின் ஆதரவை பெற அதிமுக முயற்சித்தது.
அமைச்சர்கள் பட்டாளம் கிருஷ்ணசாமியை சந்தித்து பேசிய நிலையில், அவர் ஆதரவு அளிக்க முடியாது எனக் கூறி கொந்தளித்தாராம். 7 பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளராக அரசாணை வெளியிடக்கோரி எத்தனை முறை உங்களிடம் கேட்டிருப்பேன், செய்தீர்களா, நான் வைத்த கோரிக்கை பற்றி கவனத்திலாவது எடுத்துக்கொண்டீர்களா என கேள்விகணைகளை தொடுத்தாராம்.
இதனால் அதிமுக வேட்பாளருக்கு கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவிக்கமாட்டார் என்பதை புரிந்துகொண்டு அமைச்சர்கள் அங்கிருந்து நடையை கட்டியுள்ளனர். இதனிடையே தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனும் தனது ஆதரவை தெரிவிப்பது பற்றி ஆலோசித்து விட்டுச் சொல்கிறேன் என அதிமுகவை தவிக்க விட்டிருக்கிறார்.