விண்மீன் விரைவு செய்திகள்.
துர்கா பூஜையில் இஸ்லாமிய சிறுமியை வைத்து கடவுளாக வழிபாடு!
துர்கா பூஜை வழிபாட்டில் இஸ்லாமிய சிறுமியை கடவுளாக வைத்து பூஜித்துள்ளது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
கொல்கத்தாவில் துர்கா பூஜை வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு வீடுகளிலும் இவ்விழாவை வெகுசிறப்பாக கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் ‘குமரி பூஜை’ என்ற பெயரில் பருவம் அடையாத சிறுமிகளை துர்க்கை அம்மனாக அலங்கரித்து பீடத்தில் வைத்து வணங்குவதும், பூஜிப்பதும் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வழக்கமாகும். பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை கருதி இதனை 1901ம் ஆண்டில் சுவாமி விவேகானந்தர் பேலூர் மடத்தில் தொடங்கி வைத்ததாக கூறப்படுகிறது. இது போன்ற வழிபாடுகள் பரவலாக கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது.
Durga-puja
இந்நிலையில் மேற்குவங்காளத்தின் கமர்ஹதி நகராட்சியில் பொறியாளராக பணிபுரிந்து வரும் தமால் தத்தா என்பவர் கடந்த 2013 முதலே தனது வீட்டில் குமரி பூஜையை நடத்தி வருகிறார். பல்வேறு சாதிகளை சேர்ந்த சிறுமிகளை வைத்து இந்த பூஜையை அவர் நடத்தியிருக்கிறார்.
ஃபதேபூர் சிக்ரி பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் அகமது என்ற இஸ்லாமியரின் மகள் ஃபாத்திமா என்பவரை இந்த ஆண்டு குமரி பூஜை நடத்த அழைப்பு விடுத்திருந்தார் தமால் தத்தா. அதனை ஏற்று தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார் அந்த மளிகை கடைக்காரர் அகமது.
துர்க்கை அம்மனாக சிறுமி ஃபாத்திமாவிற்கு இன்று குமரி பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. இது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது..
தனது மகளை வைத்து இப்பூஜையை நடத்தியது குறித்து அவரின் பெற்றோர் கூறுகையில், இந்த ஆண்டு குமரி பூஜைக்காக எனது மகளை தேர்ந்தெடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நாடு அனைவருக்குமானது, இதன் மூலம் இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்து வெளியிடப்படுகிறது என்றார்.
இந்து – முஸ்லிம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, எல்லாம் மனிதம் என்பதில் உள்ளது என்று சிறுமி ஃபாத்திமாவின் தாயார் புஷ்ரா பேகம் கூறினார்.